உணர்வோசை

தினமலரின் கேள்விகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘தெறி’ பதில்கள்!

ஆட்சிப் பொறுப்பை கைப்பற்ற முழுவீச்சில் களமிறங்கியிருக்கும் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், தினமலர் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி.

தினமலரின் கேள்விகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘தெறி’ பதில்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பரபரப்பான தேர்தல் பணிகளுக்கிடையே ‘தினமலர்’ நாளிதழுக்கு (மார்ச் 29,2021) தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணல் கீழே:

தினமலரின் கேள்விகளும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘தெறி’ பதில்களும்

குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க., அறிவித்ததும், 'எங்கள் திட்டங்களை இங்கிருந்து யாரோ, ஸ்டாலினுக்கு சொல்லி விடுகின்றனர். அதை வைத்து, அவர் முன்கூட்டியே அறிவித்து விடுகிறார்' என, இ.பி.எஸ்., சொன்னாரே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : இது ஒன்றே போதும்; ஆட்சி நடத்துவதற்கான நுணுக்கம், தகுதி, அவரிடம் இல்லை என்பதை அறிந்து கொள்ள. இன்னமும் பக்குவப்படாமல் தான், அவர் இருக்கிறார் என்பதையே, இது காட்டுகிறது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 'ஜெராக்ஸ்' தான், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை என, உங்கள் கட்சியினர் சொல்கின்றனரே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : சும்மா சொல்லவில்லை. அப்பட்டமான, ஜெராக்ஸ் காப்பியாகவே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவியருக்கு உரிமைத் தொகை முதல், அனைத்தும் அப்படியே இருக்கிறது. இல்லை என்று, இ.பி.எஸ்., சொல்ல முடியுமா?

மூன்று மாதத்திற்கும் மேலாக, கடுமையாக உழைத்து தயார் செய்யப்பட்ட, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும், சில விஷயங்களை, ஒரு தரப்பினர் எதிர்க்கின்றனரே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : அப்படி எந்த தரப்பினரும் எதிர்க்கவில்லை. அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. பொதுவான தேர்தல் அறிக்கையோடு, மாவட்டங்களுக்கான இன்னொரு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளோம். இது, மாவட்டங்கள், நகரங்கள், ஒன்றியங்கள், கிராமங்கள் என, பொது மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க., கூட்டணியை எதிர்க்க, 100 காரணங்களை, பா.ஜ., அடுக்கி இருக்கிறதே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : பா.ஜ.க சொல்வதாலேயே, அவை பொய்யாகத்தான் இருக்க முடியும். பா.ஜ,க எங்களை எதிர்த்தால், நாங்கள் சரியாக இருக்கிறோம் என்று, பொருள்.

தி.மு.க.,வின் முரண்பட்ட கருத்துக்களை, விளம்பரமாக வெளியிட்டு வருகிறதே அ.தி.மு.க.,?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : அந்த விளம்பரங்கள் பொய்யானவை. 'நீட்' தேர்வு, காங்கிரஸ் ஆட்சியில் வரவில்லை. பா.ஜ., ஆட்சியில் தான் வந்தது. 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு, நான் அனுமதி எதுவும் தரவில்லை. ஜல்லிக்கட்டு தடைக்கும், தி.மு.க.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மை, பொய் என்று பிரித்து, பொய்யான விளம்பரத்தை, அ.தி.மு.க., கொடுத்து வருகிறது.

கரூர் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் தாங்க முடியாமல் தான், தி.மு.க., விவசாய அணி செயலராக இருந்த சின்னசாமி, அ.தி.மு.க.,வுக்கு போய் விட்டார் என்கிறார்களே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : 'தினமலர்' நாளிதழை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம், என்ன காரணம் சொல்வார்கள்?

பத்தாண்டு காலம், அ.தி.மு.க., தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த போதும், ஆட்சிக்கு எதிரான அலை இல்லை என்கிறார்களே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : மக்களை விட்டு அதிக துாரத்தில், நீங்கள் இருப்பதாகத் தெரிகிறது.வெளியில் போய் மக்களை பாருங்கள்; மக்களிடம் கேளுங்கள்.

தி.மு.க., போன்ற, தொண்டர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்துக்கு, வியூகம் வகுத்துக் கொடுக்க, 'கார்ப்பரேட்' நிறுவனம் தேவையா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : கருத்துக் கணிப்பு எடுப்பதற்கும், கள நிலவரங்கள் அறிவதற்கும், இன்றைய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும்,- தேர்தல் நேரத்துக்கு மட்டும், எங்களுக்கு உதவ, ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.இவர்கள் வந்து விட்டதால், 'தொண்டர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' என்று, அறிவித்து விடவில்லை. தொண்டர்களின் பணி வேறு, இவர்களின் பணி வேறு. இந்த நிறுவனத்தின் வெற்றி பின்னணியை அறிந்த காரணத்தால், பலரும் வயிற்றெரிச்சலில், இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை சேர்ந்தோருக்கு, 'சீட்' கொடுக்காமல், குடும்பத்தையே தி.மு.க., புறக்கணித்து விட்டது என, புலம்புகிறார்களே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை சேர்ந்த, டாக்டர் தருண் காசி விஸ்வநாதன் தான், வீரபாண்டி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து நான் பேசியபோது, சேலத்தில் எழுந்த கைதட்டலை நீங்கள் பார்க்கவில்லை போலும். வீரபாண்டியார் குடும்பத்துப் பிள்ளை என்று தான், நான் அவரை அறிமுகம் செய்தேன்.

போலீஸ் வாகனங்களில், அ.தி.மு.க.,வினர் பணம் கடத்து கிறார்கள் என, தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்திருக்கிறீர்களே... இதற்கெல்லாம் நடவடிக்கை இருக்கா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : எங்களுக்கு கிடைத்த தகவல் உண்மை. தேர்தல் ஆணையத்தை, இன்று வரை நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால், எடுக்க வைப்போம்.

எஸ்.பி., அந்தஸ்தில் துவங்கி, டி.ஜி.பி., வரையிலான அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனச் சொல்லி, தேர்தல் கமிஷன் தலைமையகத்தில் புகார் கொடுத்து இருக்கிறீர்களாமே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : தமிழகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் மாற்றச் சொல்லி, நாங்கள் மனு கொடுக்கவில்லை. சிலர் மட்டும், ஆளும் கட்சியின் ஏவலாள்களாக செயல்படுகிறார்கள். அவர்களை பற்றி மட்டுமே, புகார் கொடுத்துள்ளோம். தமிழக நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பாலான அதிகாரிகள், விதிப்படி நேர்மையாக நடப்பவர்கள் தான் என்பதில், சந்தேகம் இல்லை.

ஒருவேளை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், இதே அதிகாரிகளை வைத்துத் தான் நிர்வாகத்தை கொண்டு செல்வீர்களா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : ஒருவேளை அல்ல; தி.மு.க., தான் ஆட்சிக்கு வரப் போகிறது; சந்தேகம் வேண்டாம். அதே அதிகாரிகள், இன்று ஏதோ நிர்ப்பந்தம் காரணமாக, அப்படி நடந்திருக்கலாம். எங்கள் ஆட்சியில், நேர்மையுடன் செயல்பட வழிநடத்தப்படுவர். பழிவாங்கும் நோக்கம் எப்போதும் இருக்காது.'

டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனை செய்து, மக்களை தங்களுக்கு ஓட்டுப் போட சொல்லுகின்றனர், அமைச்சர்கள் என, தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்துள்ளீர்கள். அதை தடுக்க முடியுமா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : தடுக்கத் தான் வேண்டும். இத்தகைய திருட்டுத்தனத்தை, உங்களைப் போன்ற, ஜனநாயக ஊடகங்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

தி.மு.க., வேட்பாளர்கள் பணம் செலவழிக்க முடியாமல், பிரசாரத்தை முழு வேகத்தில் செய்ய முடியாமல் தடுமாறுகிறார்களாமே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : அப்படியா! உங்கள் கவலைக்கு நன்றி.

கருப்பர் கூட்டத்துக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டதோடு, ஹிந்து மத கோட்பாடுகளை கொச்சைப்படுத்தி பேசி வந்த எழிலனுக்கு, ஆயிரம் விளக்கில், 'சீட்'கொடுத்திருக்கிறீர்களே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : எவரது நம்பிக்கையையும், தி.மு.க., கொச்சைப்படுத்தாது. அவரவர் வழிபாடு, அவரவர் உரிமை.

'சீட்' கிடைக்காத விரக்தியில், காலையில் பா.ஜ.,வில் சேர்ந்து, மதியம் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றிருக்கிறாரே,மருத்துவர் சரவணன்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : பா.ஜ.,வில் இருக்கும் வேட்பாளர் பஞ்சத்துக்கு, இது ஒரு உதாரணம்.

தேர்தல் முடிந்து, ஒரு மாதம் காத்திருந்த பின் தான், தேர்தல் முடிவுகள் தெரியும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்துக்கு, ஓட்டுப் பெட்டிகளை முறைகேடு இல்லாமல் பாதுகாக்க வேண்டுமே என்ற அச்சம், தி.மு.க.,விடம் இருக்கிறதா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : எங்கள் கட்சியினர் காவலுக்கு கெட்டிக்காரர்கள். உங்களது முன்னெச்சரிக்கைக்கு நன்றி.

கட்சியிலும், வெளியேயும் விமர்சனங்கள் இருந்த நிலையிலும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு, 'சீட்' கொடுக்கப்பட்டிருக்கிறதே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.க., உறுப்பினருக்குத் தானே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வை இனி ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்ற சூழலிலும், அதை ரத்து செய்வோம் என, உறுதிபட தெரிவிப்பது எப்படி?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : வாய்ப்பே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்; இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமே, 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது என்பதை மனதில் வையுங்கள்.

ஏற்கனவே, 5.7 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையால் தள்ளாடும் சூழலில், இலவச அறிவிப்புகளை, இரு திராவிட இயக்கங்களும் போட்டி போட்டு அள்ளி விடுவது சரியா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடி வரிச்சலுகை தரும்போது கேட்பீர்களா, இந்தக் கேள்வியை? முடிந்தால் நிர்மலா சீதாராமனிடம் போய் கேளுங்கள். கடனாளி நாட்டில், தனி நபர் வாராக் கடன்களை ரத்து செய்வது தவறல்லவா என்று கேளுங்கள்.

தமிழக கஜானா நிறைய, என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பீர்கள்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : தேர்தல் அறிக்கையில், இது பற்றி தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. கடன்களில் இருந்து மீள, நிதி நிலைமையை பெருக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சொல்லப்பட்டு உள்ளது.

மது விலக்கு விஷயத்தில், உங்கள் நிலைப்பாடு என்ன?தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : காத்திருங்கள். தேர்தல் அறிக்கையை நன்றாகப் படித்துப் பாருங்கள்.'

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம்' என, தி.மு.க., சொல்வது அரசியலுக்காகவா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : இல்லை. ஓ.பி.எஸ்., சொன்னதற்கு, அவர் பரிகாரம் காணவில்லை. இ.பி.எஸ்., அமைத்த ஆணையத்தின் முடிவை, அவரே வாங்கித் தரவில்லை. இந்த மர்மத்தில் மறைந்துள்ளதை, தி.மு.க., அரசு வெளிக் கொண்டு வரும்.

'மிகச் சிறந்த பொய்யர்' என, முதல்வர் இ.பி.எஸ்., உங்களை விமர்சிக்கிறாரே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : டேபிளுக்கு கீழே ஊர்ந்து போனாரே அவரா?

தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் ஏகப்பட்ட அதிருப்தி இருப்பதாக, பல இடங்களிலும், பலரும் போராட்டம் நடத்தி இருக்கின்றனரே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : உங்கள் கனவில் அப்படி வந்ததா?

கட்சியில் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தென் மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : தங்கை கனிமொழி, மகளிரணி செயலராக உள்ளார். தற்போது, தேர்தலுக்கு பணியாற்ற, தென் மண்டல பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹிந்துக்களுக்கு நாங்கள் எதிரி அல்ல என்று காட்டுவதற்காக, வேல் வாங்கினீர்கள்; அது தொடர்ந்து நடக்கவில்லையே?

திருத்தணியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், அந்த நகரின் அடையாளமாக, வேல் தரப்பட்டது; வாங்கிக் கொண்டேன். வேலை வாங்காமல் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

முதல்வர் இ.பி.எஸ், தினகரன், கமல், மோடி, ராமதாஸ், சீமான் என எல்லாரும், தி.மு.க.,வுக்கு எதிராக வரிந்துகட்டி களம் இறங்கி இருப்பது ஏன்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.க., ஆட்சிக்கு வரப் போவதால்.

தி.மு.க., - காங்., ஊழல் கூட்டணி என, அமித் ஷாவும், மோடியும் விமர்சிக்கின்றனரே?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : இ.பி.எஸ்.,சையும், ஓ.பி.எஸ்.,சையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, இதை மோடியும் அமித் ஷாவும் சொல்ல, என்ன தகுதி இருக்கிறது; பா.ஜ., ஆட்சி மொத்தமாக, இரண்டு மிகப்பெரிய கம்பெனிகளுக்கு சாதகமான அவர்களது மறைமுக ஆட்சி என்பது, நாடறிந்த ரகசியம். இவர்களா ஊழலை பற்றி பேசுவது?

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணலில் பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories