
தமிழ்நாட்டில் நிர்வாகத்திறனற்று செயல்படும் த.வெ.க.வினர், “நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு புதிது, எங்களுக்கு நேரம் கொடுங்கள்” என வாய்கிழிய பேசி வரும் அதே வேளையில், முறைகேடுகளில் மட்டும் கைதேர்ந்தவர்களாக உலா வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது, த.வெ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும்தானே தவிர, அரசு அதிகாரிகளோ - ஊழியர்களோ அல்ல.
முதலமைச்சரும், அமைச்சர்களும் அறிவுறுத்தல்கள் வழங்குபவர்களே தவிர, அதற்கு செயல்வடிவம் கொடுப்பது என்னவோ அதிகாரிகள்தான்.
அப்படி கடந்த ஆட்சிக்காலத்தில், சிறந்த செயல்வடிவம் கொடுத்த அதிகாரிகளைதான், இன்றைய ஆட்சியாளர்களும் தன்வசம் வைத்துள்ளனர்.
அப்படி இருக்க, மின்வெட்டிற்கு கால அவகாசம் கேட்பது, குற்றங்களைத் தடுக்காமல் முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவது என்பதான, சிறுபிள்ளைத்தனத்தை சரியாக மேற்கொண்டு வருகிறது த.வெ.க அரசு.
அவ்வரிசையில், குதிரை பேரம் மூலம் தங்களது கட்சிக்கு புதிதாக - பழையவர்களை இணைப்பதில் காட்டி வரும் முனைப்பை, ஆட்சி அதிகாரத்தின் மூலம் செய்யும் ஊழலிலும் தொடர்ந்து வருகிறது.
அந்த ஊழலை துவைத்து கிழித்து காய வைத்திருக்கிறார் தமிழ்நாட்டின் பெண் ஒருவர்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மஞ்சப்பையையும், த.வெ.க ஆட்சியில் வழங்கி வரும் துணிப்பையையும் ஒப்பிட்டு, த.வெ.க.வின் முகத்திரையை கிழித்துள்ளார்.
அதில், துவைத்தாலும் மஞ்சப்பை தரம் குறையாததும், தண்ணீர் பட்டதற்கே த.வெ.க அரசின் துணைப்பை கரைந்துவிடுவதையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இது குறித்து, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,“தொட விடமாட்டேன்; தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே...
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள், தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல, சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே;
மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!” என விமர்சித்துள்ளது.






