
மகளிர் இட ஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்க்கிறது என்பது போன்ற தோற்றத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்க்கவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டை முன்னிறுத்திக் கொண்டு நியாயமற்ற தொகுதி வரையறையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்வதையும்தான் எதிர்க்கிறோம்.
"பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே?” என்றுதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.
மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் இழுத்தடித்தது பா.ஜ.க. அரசுதானே?
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றியது பா.ஜ.க. அரசு. அதனை உடனடியாகச் செயல்படுத்த முடியாத அளவுக்கு பா.ஜ.க.வே தடை போட்டுக் கொண்டது.
"மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு - அதனடிப்படையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவோம்” என்று சொல்லப்பட்டு இருந்தது. அப்படியானால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், அதனடிப்படையில் தொகுதி மறுவரையறையையும் செய்யவே பத்து ஆண்டுகள் ஆகும். அதன்பிறகுதான் மகளிருக்கு 33 விழுக்காடு தரப்படும் என்று தள்ளிப் போட்டார்கள். உண்மையில் மகளிர் இடஒதுக்கீட்டில் அக்கறை இருந்தால் உடனடியாக அமல் ஆகும் என்று அல்லவா பா.ஜ.க. அப்போது சொல்லி இருக்க வேண்டும்?
மகளிர் இடஒதுக்கீட்டில் பா.ஜ.க.வுக்கு அக்கறை உண்டா? 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. வந்ததும் ஏன் இதனைக் கொண்டு வரவில்லை? 2016-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி 'மகளிர் நாள்' அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் அனைவரும் இதற்காகக் குரல் கொடுத்தார்கள். "33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது?” என்று கேட்டார்கள். அப்போது பா.ஜ.க. அரசு வாய் திறக்கவில்லை. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்புச் சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில் 100- இல் 1 விழுக்காடுகூட மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு அக்கறை காட்டவில்லை.

2014-ஆம் ஆண்டும், 2019-ஆம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்றது பா.ஜ.க அரசு. நினைத்திருந்தால் அவர்கள் அதனை உடனடியாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? 2023 ஆட்சி முடியும் போது, மகளிரை ஏமாற்றக் கொண்டு வந்தார்கள்.
'பெண்களைப் பாதுகாக்க வேண்டும், சுதந்திரம் தரக்கூடாது' என்ற அரிய தத்துவம் சொன்னவர் இன்றைய உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். 2010ஆம் ஆண்டு பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த பா.ஜ.க. உறுப்பினர்களில் அவர் முக்கியமானவர். 2014 ஆம் ஆண்டு தனது இணையத் தளத்திலும் எதிர்த்து எழுதி இருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள். மகளிர் சேரக் கூடாது என்று அமைப்பு தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வாரிசுகள்தானே இவர்கள்?
இப்போது அவர்கள் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக அமல் செய்யத் துடிப்பது மகளிர் மீதான அக்கறையால் அல்ல. அந்தச் சட்டத்தைக் காட்டி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
மகளிர் உரிமை குறித்தோ, மகளிர் விடுதலை குறித்தோ, மகளிருக்கான அதிகாரம் குறித்தோ தி.மு.க.வுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, மகளிர் முன்னேற்றம்தான்.
திராவிட இயக்கத்தில் ஆரம்ப கால அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை தரப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், சுயமரியாதை திருமணச் சட்டத்தை இயற்றினார்கள். "பெண்ணுக்கு சொத்தில் சம பங்கு” உரிமை கொடுத்தார் தலைவர் கலைஞர் அவர்கள். இது 1929 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம். அதனை 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். பெண் காவலர்களை உருவாக்கியவர் கலைஞர். மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கியவர் கலைஞர்.
உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கொடுத்தவர் கலைஞர். அதாவது சட்டமன்றத்தில், நாடாளு மன்றத்தில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன்னதாகவே உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதனைத் தொடர்ந்தவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பொறுப்புகளில் 11 பதவி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள இடங்கள் 21 என்றால் அதில் 11 இடங்கள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களில் 50 சதவிகித இடங்கள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பங்கீடு மிகச் சரியாகச் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழிவகை காட்டியுள்ள ‘பெண்களுக்கான ஒதுக்கீடு' என்பது, காலப்போக்கில் பெண்களின் அரசியல் சுதந்திரத்திற்கு அடித்தளம் அமைப்பதாக அமைந்துள்ளது. இத்தகைய திராவிட முன்னேற்றக் கழகத்தைதான், மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகச் சொல்கிறார் பிரதமர். இது எதுவும் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.






