முரசொலி தலையங்கம்

”கச்சத்தீவு வரலாறு தெரியாமல் திமுக மீது பழிபோடும் பிரதமர்” : உண்மையை விளக்கிய முரசொலி!

அண்ணாமலைகள் சொல்வதை எல்லாம் பிரதமர் சொன்னால், அவர் தான் மாட்டிக் கொள்வார்.

”கச்சத்தீவு வரலாறு தெரியாமல் திமுக மீது பழிபோடும் பிரதமர்” : உண்மையை விளக்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-04-2024)

கலைஞர் எதிர்க்கவில்லையா ?

இலங்கைக்கு கச்சத்தீவை இந்தியா வழங்கும் போது அன்றைய முதலமைச்சர் கலைஞர் எதிர்க்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சொல்லி இருக்கிறார்கள். வரலாற்றின் எந்தத் தகவல்களையும் அறிந்து கொள்ள முயற்சிக்காதவர்கள் தான் இப்படி எல்லாம் சொல்வார்கள்!

ஒரு ஒப்பந்தம் என்றால் சட்டத் திருத்தமோ, அல்லது ஒரு சட்டமோ நிறைவேற்றி இருக்க வேண்டும். அப்படி எதுவும் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அப்படிக் கொண்டு வரப்பட்டு இருந்து அதனைத் தி.மு.க. ஆதரித்ததும் இல்லை. இந்தத் தகவல் நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்டபோது தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். கண்டித்து வெளிநடப்புச் செய்தார்கள்.

1971 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கை அரசு சொந்தம் கொண்டாடியதுமே - அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு உத்தரவிட்டார். கச்சத்தீவானது இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்கள்.

கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் கலைஞர் கடிதம் எழுதினார். டெல்லிச் சென்று வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங்கை கலைஞர் சந்தித்தார். ‘எக்காரணத்தைக் கொண்டும் கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது’ என்று வலியுறுத்தினார். அவருடன் சட்ட அமைச்சர் செ.மாதவனும் உடன் சென்றிருந்தார். பின்னர், பிரதமர் இந்திராவையும் முதலமைச்சர் கலைஞர் சந்தித்தார். கச்சத்தீவு இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் பிரதமரிடம் வழங்கினார்.

பின்னர், இந்த ஆதாரங்களை அடுக்கி பிரதமருக்கு முதல்வர் கலைஞர் ஒரு கடிதம் எழுதினார். “கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துக்கீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்குச் செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குப்பகுதிக் கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, ‘கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமல்ல’ என்று நிரூபிக்க முடியும்.” என்று அதில் குறிப்பிட்டார் முதல்வர் கலைஞர்.

”கச்சத்தீவு வரலாறு தெரியாமல் திமுக மீது பழிபோடும் பிரதமர்” : உண்மையை விளக்கிய முரசொலி!

இந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டு மீண்டும் டெல்லிச் சென்றார் முதல்வர் கலைஞர். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கை முதலமைச்சர் கலைஞர் சந்தித்துப் பேசினார். “கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்குத் தமிழக அரசு சம்மதிக்காது’ என்று தெளிவுபடுத்தினார் முதல்வர். மீண்டும் வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்தார் கலைஞர். ‘கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றும் அதில் உறுதி மாறாமல் இருக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா டெல்லி வந்தார். அப்போது, பிரதமர் இந்திராவுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் அனுப்பினார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கே உரிமையானது என்பதை நிலைநாட்டக் கோரிக்கை வைத்தார் கலைஞர். வெளியுறவுத் துறை செயலாளர் கேவல் சிங், சென்னை வந்து முதல்வர் கலைஞரைச் சந்தித்தார். அவரிடமும் கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதை கடுமையாக எதிர்த்து முதல்வர்

கலைஞர் பேசினார். “கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்குத் தான் முதல் ஆபத்து” என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாள் -அதாவது ஜூன் 29 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் கூட்டினார்கள். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் கலைஞர்.

“இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு – மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” - என்பதே கலைஞரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஆகும்.

ஒப்பந்த நகலானது நாடாளுமன்றத்தில் ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கடுமையாக எதிர்த்துப் பேசினார் தி.மு.க. உறுப்பினர் இரா.செழியன். ‘இது கீழ்த்தரமான ஒப்பந்தம்’ என்று நாஞ்சிலார் பேசினார். அனைவரும் வெளிநடப்பு செய்தார்கள்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிரான கண்டனக் கூட்டங்களை தி.மு.க. நடத்தியது. ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இக்கூட்டங்களை நடத்துவதாக கழகம் அறிவித்தது. தஞ்சையில் கலைஞரும், சென்னையில் பேராசிரியரும் கண்டன உரையாற்றினார்கள். அப்போது ஸ்ரீபெரும்புதூர் நகரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியவர் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! இவை எதையும் அறியாமல் தி.மு.க. மீது பழிபோடுகிறார் பிரதமர்.

அண்ணாமலைகள் சொல்வதை எல்லாம் பிரதமர் சொன்னால், அவர் தான் மாட்டிக் கொள்வார்.

banner

Related Stories

Related Stories