முரசொலி தலையங்கம்

தை பொங்கல் பண்டிகை : “வேத காலத்துக்கு முன்பு இருந்தே கொண்டாடப்படும் விழா...” - முரசொலி தலையங்கம் !

சமத்துவ உணர்வு - சமூகநீதி உணர்வு இந்தியா முழுமைக்கும் மலரும் ஆண்டாக தை தொடங்கும் ஆண்டு அமையப் போகிறது. பொங்க வேண்டியவைக்கும் பொங்கி சமநிலை கூட்டாட்சி அரசை ஒன்றிய அளவில் அமைப்போம்.

தை பொங்கல் பண்டிகை : “வேத காலத்துக்கு முன்பு இருந்தே கொண்டாடப்படும் விழா...” - முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமத்துவமாய் பொங்கட்டும்

இயற்கையுடன் இணைந்ததே தமிழர்களின் - தமிழ்நாட்டின் வாழ்வியல் முறையாகும். இயற்கையை வணங்குதல்தான் தமிழர்களின் - தமிழ்நாட்டின் மரபும் ஆகும். மரபின் தொடர்ச்சியும் ஆகும்.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.” (குறள்:1031) - என்றார் வான்புகழ் வள்ளுவர். எத்தனை தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழிலுக்கு அடுத்தே அத்தனை தொழில்களும் என்றவர் அவர். மண்ணையும் மக்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல மண்ணையும் பண்பாட்டு விழுமியங்களையும் பிரிக்க முடியாது. வேளாண்மையைக் கொண்ட மனிதன், வேளாண் விளைச்சல் கிடைக்கும் முதல் நாளைக் கொண்டாடினான். அதுதான் பொங்கல் பெருவிழா. முதல் விளைச்சலை வைத்துப் பொங்கியது (சமைத்தது) தான் பொங்கல் பெருவிழா.

''தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - என்று நற்றிணையும்

''தைஇத் திங்கள் தண்ணிய தரினும்'' என்று குறுந்தொகையும்

"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" - என்று கலித்தொகையும் சொல்கிறது.

பொங்கலைப் பற்றிய அதிகமான பாடல்கள் பரிபாடலில் உள்ளன. வேத காலத்துக்கு முன்பு இருந்தே கொண்டாடப்படும் விழாவாக இது அமைந்துள்ளது. அதனால்தான் இதற்கு எந்த கற்பனைக் கதையும் இல்லை என்றார் தந்தை பெரியார்.

“மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” - என்கிறது சீவக சிந்தாமணி.

செந்தீ மூட்டிப் புதுப் பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பண்பாட்டு விழாவாக சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்.

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,

மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி

வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,

சாந்த விறகின் உவித்த புன்கம்,

கூதளங் கவினிய குளவி முன்றில்,

செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி,

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும! - என்கிறது புறநானூறு.

புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியை இட்டு, சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தைச் சொல்கிறது புறநானூறு.

"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்

தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்"

என அறுவடை செய்யும் உழவரைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து” - என்கிறது சிலப்பதிகாரம். புழுக்கலும், நோலையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாகக், குறிப்பிடப்படுகிறது. சங்க காலத்தில் 'புழுக்கல்' என்றால் பொங்கல் என்று பொருள். இன்று நாம் சொல்லும் 'புழுங்கல் அரிசி' இந்த வழக்கமாகத்தான்.

''நெய்பூசும், பொன்புழுக்கள் நேரிழையார்க்

கொண்டாடும் தைப்பூசம்'' - என்கிறார் திருஞானசம்பந்தர்.

தனது விளைச்சல் அனைத்தையும் சூரியனுக்கு முன் படையல் இட்டு வணங்கினார்கள். கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும், காய்க்கின்றன என்றும் அன்றே கண்டுபிடித்தார்கள்.

தை பொங்கல் பண்டிகை : “வேத காலத்துக்கு முன்பு இருந்தே கொண்டாடப்படும் விழா...” - முரசொலி தலையங்கம் !

தை முதல் நாள் என்பது அந்த ஆண்டின் புதுத் தொடக்கம் ஆகும். அப்படியானால் முந்தைய பழையவைகளைப் போக்க (அழிக்க) வேண்டாமா? அதனால்தான் பொங்கலுக்கு முந்தைய நாள் 'போக்கி நாள்' கொண்டாடப்பட்டது. அதுதான் இன்று பேச்சு வழக்கில் 'போகி' யாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழியின் இறுதிதான் 'போக்கி' நாள். தை முதல் நாள், 'போக்கி'கள் அனைத்தையும் நீக்கி புதுமைகள் தொடங்கும் நாள் ஆகும்.

உழவுக்கு உறுதுணையாக இருப்பவை மாடுகள். எனவே அடுத்ததாக மாடுகளுக்கான நாள். அனைவரையும் கண்டு மகிழும் நாள் 'காணும் பொங்கல்'. இந்த இனத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே அறத்தைச் சொன்ன திருவள்ளுவர் நாளும் இத்தோடு சேர்கிறது. எனவே தான், பொங்கல் வாரம் என்பது தமிழர் தம் பண்பாட்டு வாரமாக அமைந்திருக்கிறது. அதனால்தான் இதனை 'சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடுங்கள்' என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

“தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்து கொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் - மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைதளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். இத்தகைய சமத்துவ உணர்வு - சமூகநீதி உணர்வு இந்தியா முழுமைக்கும் மலரும் ஆண்டாக தை தொடங்கும் ஆண்டு அமையப் போகிறது. பொங்க வேண்டியவைக்கும் பொங்கி சமநிலை கூட்டாட்சி அரசை ஒன்றிய அளவில் அமைப்போம்.

- முரசொலி தலையங்கம்

15.01.2024

banner

Related Stories

Related Stories