முரசொலி தலையங்கம்

“தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர வைக்க புறப்பட்டுவிட்டார் ஒரு தலைவர்” - முரசொலி தலையங்கம் புகழாரம்!

பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தை பாழ்படுத்தியதைப் பட்டியலிட்ட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், அப்படி புகார் சொல்வதோடு நிறுத்திவிடாமல், நமது ஆட்சி எத்தகையதாக அமையும் என்பதைச் சொன்னார்.

“தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர வைக்க புறப்பட்டுவிட்டார் ஒரு தலைவர்” -  முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

இதோ தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர வைக்க ஒரு தலைவர் புறப்பட்டுவிட்டார்! இன்றைய விடியலுக்கான முழக்க மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது திருச்சியில். தி.மு.க.வின் வரலாற்றில் மட்டுமல்ல; தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாநாடாக இது நடந்துள்ளது. சிறப்பு பொதுக்கூட்டம் என்றுதான் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். ஆனால் காலமும், சூழலும் அதனை மாநாடாக மாற்றிவிட்டது!

தொண்டர்கள் அமரும் பகுதி மட்டும் 369 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாநாட்டிலும் இவ்வளவு ஏக்கர் பரப்பளவில் தொண்டர்கள் அமரும் பகுதி உருவாக்கப்படவில்லை. நம்முடைய கருப்பு சிவப்பு இருவண்ணக் கொடியானது 90 அடி உயரத்தில் பறக்கிறது. மாநாட்டு மேடையை அனைவரும் பார்க்க வசதியாக 300 அடியில் பிரமாண்டமான எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது. மேடைகளே மூன்று விதமாக மூன்று இடங்களில் பிரித்து அமைக்கப்பட்டு இருந்தது.

இப்படி இதன் பிரம்மாண்டத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம். நாம் பிரமாண்டமான வெற்றியை அடையப் போகிறோம். அதன் அடையாளமாகத்தான் இந்த பிரமாண்டமான மாநாடு அமைந்திருந்தது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தை பாழ்படுத்தியதைப் பட்டியலிட்ட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், அப்படி புகார் சொல்வதோடு நிறுத்திவிடாமல், நமது ஆட்சி எத்தகையதாக அமையும் என்பதைச் சொன்னார். அடுத்த பத்தாண்டுக்கான செயல்திட்டம் அது. பத்தாண்டுக்கானது மட்டுமல்ல; தமிழகத்தின் எதிர்காலத்துக்கான திட்டமிடுதல்தான் அது!

“தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர வைக்க புறப்பட்டுவிட்டார் ஒரு தலைவர்” -  முரசொலி தலையங்கம் புகழாரம்!

பொருளாதாரம்

விவசாயம்

குடிநீர்

கல்வி

நகர்ப்புற வளர்ச்சி

ஊரக வளர்ச்சி

சமூக பாதுகாப்பு - ஆகிய ஏழு துறைகளுக்கு எனது அரசு முதல் முன்னுரிமை வழங்கும் என்று அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் பொருளாதாரத்தை தரை மட்டத்துக்கு கீழே இறக்கி விட்டார்கள். இதனை மீட்டு சிகரத்தில் வைத்தாக வேண்டும். இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டு போக வேண்டும். தனிநபர் வருமானத்தை உயர்த்துதலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதலும் அதில் முக்கியமானதாக இருக்கும்! ஆண்டுக்கு பத்து லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்! என்ற அறிவிப்பு தொழிலதிபர்கள், சிறுகுறு வர்த்தகர்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பாக அமைந்துள்ளது!

உழவுக்கு முதன்மை தரும் அரசாக அமைப்போம். தமிழகத்தின் பயிர் பரப்பை அதிகப்படுத்துவோம். இருபோக நில உற்பத்தியையும் இரு மடங்கு ஆக்குவோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழகத்தை மூன்று இடங்களுக்குள் கொண்டு வருவோம்! - என்ற அறிவிப்பு விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, மண்ணை நம்பி வாழும் மக்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்பாக அமைந்துள்ளது!

குடிமக்கள் அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடி தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தருவோம். தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை உயர்த்தி, வீணாகும் தண்ணீர் அளவினைக் குறைப்போம். தண்ணீர் மறுசுழற்சியை ஊக்குவிப்போம். பசுமைப் பரப்பளவை உயர்த்துவோம்! என்ற அறிவிப்பு அனைவரின் தாகம் தீர்ப்பதாக உள்ளது. குடிநீருக்காக தெருக்களில் அலைவதும், குடிநீருக்காக சாலை மறியல் செய்வதுமான காட்சிகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும்!

அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கை. இந்த இயக்கம் தோன்றியதன் முக்கிய நோக்கமே அனைவர்க்கும் கல்வி என்பதற்காகத்தான். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் தொகையை மூன்று மடங்கு ஆக்குவோம். கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் இன்று தமிழகம் 17 ஆவது இடத்தில் இருக்கிறது. இதனை மாற்றி 10 இடங்களுக்குள் கொண்டு வருவோம். இடையில் நின்றுவிடும் மாணவர் எண்ணிக்கையை குறைப்போம்.

“தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர வைக்க புறப்பட்டுவிட்டார் ஒரு தலைவர்” -  முரசொலி தலையங்கம் புகழாரம்!

முன்மாதிரி பள்ளிகளையும், முன்மாதிரி மருத்துவமனைகளையும் உருவாக்குவோம். மருத்துவப் பணியாளர் எண்ணிக்கையை இரண்டு மடங்கு ஆக்குவோம்! என்ற அறிவிப்புக்குள் தான் மாணவர் நலன் அடங்கியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக்கனியாக மாறிக் கொண்டு இருக்கிறது. அதற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பாக உள்ளது!தமிழகத்தின் அனைத்து நகரங்களையும் நவீனமானதாக ஆக்குவோம்.

இந்தியாவின் தலைசிறந்த நகரங்களாக தமிழக மாநகரங்களை மாற்றுவோம். குடிநீர் இணைப்புப் பெற்ற வீடுகளின் அளவை 75 சதவிகிதமாக உயர்த்துவோம். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கு முன்னுரிமை தருவோம். அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பை செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பு தமிழகத்தை நவீன மயமாக்கும் அறிவிப்பாக உள்ளது!

நகர்ப்புறங்களைப் போலவே ஊரகப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக மாற்றுவோம். கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவோம். குடிநீர் இணைப்புகள், சாலைகள், வடிகால் அமைப்புகள், இணைய வசதிகள், திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றையும் வழங்குவோம். அதாவது ஊரகப் பகுதிகளில் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதாக உள்ளது. இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது என்றார் காந்தி. அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதாக இது அமையும்!

சமூகத்தில் ஏழை - பணக்காரர், உயர்ந்த சமூகம் - அடுத்த சமூகம், நகரவாசி - கிராமவாசி, ஆண் - பெண் என்ற எந்தப் பேதமும் இல்லாமல் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் தமிழகத்தை அமைக்க வேண்டும். சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு கொள்கை, அதன் மூலமாக வழங்கப்படும் உதவித் தொகைகள் அனைத்தும் சீராக வழங்கப்படும். மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும். குடும்பத் தலைவியர்க்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைவழங்கப்படும் என்ற அறிவிப்பில்தான் தமிழகத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது.

இது சமூகநீதி மண். கல்வி, வேலை ஆகியவற்றோடு சேர்த்து மனிதனை அதிகாரம் பொருந்தியவனாக மாற்றியாக வேண்டிய கடமை திராவிட இயக்கத்துக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் லட்சிய முழக்கமே இந்த ஏழாவது உறுதிமொழிதான். அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவியரின் உழைப்பு என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தால் இன்று வரை அங்கீகரிக்கப்படவில்லை.

அலுவலக வேலைக்குச் செல்லாத பெண்கள், ‘வீட்டுல சும்மா தான்இருக்கேன்' என்று சொல்வது உண்டு. ஆனால் அவர்கள் சும்மாவா இருக்கிறார்கள். 24 மணிநேரமும் அவர்களுக்கு வேலை இருக்கிறது. அந்த ‘உழைப்பு' அங்கீகரிக்கப்படுவது இல்லை. அத்தகைய சமூக அங்கீகாரத்தை வழங்கும் வகையில் பெண்களுக்கான உரிமைத் தொகையை அறிவித்துள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின்!

வானத்தில் இருந்து ரட்சகர்கள் குதிப்பது ஒருவகைப்பட்ட புனைவுதான். ஆனால் அத்தகைய ரட்சகர்களை பூமி தான் உற்பத்தி செய்கிறது. தமிழகத்துக்கு இன்றைய சூழலில் ரட்சகராக உருப்பெற்று உயர்ந்து நிற்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின். மக்கள் வழங்க இருக்கும் அதிகாரம், மக்களுக்கே நன்மை செய்வதாக விரைவில் அமையட்டும்! இவைதான் எனது தொலை நோக்குத் திட்டங்கள்! இவை அனைத்தும் பத்து ஆண்டுத் திட்டமாக படிப்படியாக அமல்படுத்தப்படும்.

banner

Related Stories

Related Stories