
சுப்ரியா சாகு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘Champions Of The Earth' விருதை ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்த விருது சுற்றுசூழலுக்காக சிறந்த பங்களிப்பை வழங்க கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த நிலையில் ஐ.நா.வின் விருதை பெற்றுள்ள சுப்ரியா சாகுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு : -
சுப்ரியா சாகு, இ.ஆ.ப. அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது!
காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக UNEP அமைப்பின் Champions Of The Earth விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப. அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்.






