
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை.
தினமும் காலையில் விடிகின்றபோது நம்முடைய சென்னை, முந்தைய நாள் குப்பைகள் இல்லாமல், தூய்மையாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இரவு முழுவதும் கடுமையாக உழைக்கின்ற, தூய்மைப் பணியாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள்தான்!
அப்படிப்பட்ட உங்களுக்கு உணவு வழங்கும் இந்த முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் உள்ளபடியே பெருமை அடைகிறேன்!
என்னதான், சத்தான உணவு – டயட் – எக்சர்சைஸ் என்று இருந்தாலும், நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், அதற்கு அடிப்படை என்னவென்று கேட்டால், தூய்மைதான்!
வெயில் - மழை - வெள்ளம் – புயல் என்று இந்த மாநகரம் எந்த பேரிடரை எதிர்கொண்டாலும், அதிலிருந்து மீண்டு வருவதில் உங்களுடைய பணி தான் மிக முக்கியமானதாக இருக்கிறது!
உங்களின் ஒப்பற்ற உழைப்பால்தான், நம்முடைய சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது!
உங்களால்தான் நீர்நிலைகள் தூய்மையாக இருக்கிறது! உங்களால்தான் குழந்தைகள் நலமாக பள்ளிக்கு எல்லாம் சென்று வருகிறார்கள்!
நான் இந்த சென்னை மாநகருக்கு மேயராக பொறுப்பேற்ற போது, தலைவர் கலைஞர் எனக்கு என்ன அறிவுரை சொன்னார்கள் என்றால், “இது பதவியல்ல; பொறுப்பு” என்று சொன்னார். அதேபோல், நான் உங்களுக்கு சொல்கிறேன்… நீங்கள் செய்வதும் வேலை இல்லை; அது சேவை!
சென்னையில் நைட் டிராவல் செய்பவர்களுக்கு தான் தெரியும்… பகலெல்லாம் பிசியாக இருக்கின்ற இந்த சிட்டியில், ஊரே அடங்கிய பிறகு, ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் நீங்கள்தான்!
உங்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை உணர்வை பார்த்து - நான் மட்டுமல்ல; இந்த மாநகரமே நன்றியுணர்ச்சியோடு உங்களை வணங்குகிறது! ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு எல்லாம் என்னுடைய இதயபூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்!
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்தச் சென்னைக்கு மேயராக பொறுப்பேற்றபோது, தூய்மையான நகராக இந்த நகரை உயர்த்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தூய்மைப் பணிகளில், இயந்திரங்களை பயன்படுத்த நாங்கள் தொடங்கினோம்.

குப்பைகளை, மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று பிரித்து வைத்து, அதை மேலாண்மை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எல்லாம் கொண்டு வந்தேன். அதையெல்லாம்தான் இன்றைக்கு நாம் அடைந்திருக்கின்ற மாற்றத்திற்கு முதல் படி!
இந்த மாநகரத்தை தூய்மையாக பாதுகாக்குகின்ற உங்களை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை! உங்களுடைய மாண்பு காக்கப்பட வேண்டும்! உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்! உங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! இதுதான், சமூகநீதி!
இந்த சமூகநீதிப் பயணத்தில் உங்கள் சுயமரியாதையை காத்து - உங்கள் பசியைப் போக்கிடத்தான், இன்றைக்கு இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்!
இந்தத் திட்டத்தின்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்கு இடையில், உணவு வேளையில் சுவையும் - ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்படும்.
தூய்மையான முறையில் சமைத்து, டிஃபன் பாக்ஸில் வைத்து, சூடு குறையாமல் இருப்பதற்கு வெப்பக் காப்புப் பையில் அதை எடுத்துச் செல்லப்பட்டு, தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகாமையிலேயே உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவு பரிமாறப்படும்.
நம்முடைய நலனுக்காக உழைக்கின்ற மக்களுக்கு உணவு அளிப்பது அரசின் பொறுப்பு என்கின்ற உணர்வோடுதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
இது இல்லாமல், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக நம்முடைய கழக ஆட்சி காலத்தில் செய்த, மற்ற முக்கியமான திட்டங்கள் நிறைய செய்திருக்கிறோம். அதுபற்றி நான் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
2006 – 2011-ல் தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்கு அதனை வழிவகை செய்தோம். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடங்கப்பட்டது.
தாட்கோ நிறுவனம் மூலமாவும், தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் தொழில் முனைவோராக வழிவகை செய்யப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டன.
நகர்ப்புறப் பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் தள்ளுவண்டி பயன்படுத்துவதால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்தைப் போக்குவதற்கு மூன்று சக்கர மிதிவண்டி வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு முதன்முறையாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் துவங்கப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கக்கூடிய பணியில் ஈடுபட்டு, பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் வாரிசுகளுக்கு கருணைத் தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இப்போது நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர்
12-ஆம் தேதி, மதுரையில் நான் தொடங்கி வைத்தேன்.
இந்த திட்டத்தில், நான் முதல்வன் திறன் பயிற்சி, பாதுகாப்பு உபகரணம் வழங்குதல், ஹெல்த் இன்சூரன்ஸ், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், தொடர் உடல்நல பரிசோதனைகள் மற்றும் மாற்று வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை தடையின்றி பெற ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இதற்காக, 50 கோடி ரூபாய் - அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் நடைபெறும் அனைத்து பணிகளும், முழுமையாக இயந்திரமயம் ஆக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் நிறைய நலத்திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இவ்வளவு செய்திருந்தாலும், உங்களுக்கான தேவைகள் இன்னும் நிறைய இருக்கிறது என்று எனக்கு நன்றாக தெரியும்!
நான் நிச்சயமாக சொல்கிறேன்… அதையெல்லாம் நம்முடைய திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்!
இரவு பகல் பார்க்காமல் நீங்கள் உழைக்கிறீர்கள்… ஆனால், உங்களுக்கென்று தனியாக ஓய்வறை இல்லை என்று பலரும் கவலைப்படுவதாக என்னிடம் சொன்னார்கள்… பலபேர் என்னிடத்தில் சொன்னார்கள். அதனால், இந்த நிகழ்ச்சி மூலமாக ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்…
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு அவைகள் கொண்டு வரப்படும்!
அதுமட்டுமல்ல, இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டம் வருகின்ற டிசம்பர்
6-ஆம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்!
நான் ஏற்கனவே சொன்னது போல, உங்களுடைய மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்! என்னைப் பொறுத்தவரைக்கும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு சென்னை தான் இந்தியாவிலேயே - “கிளீன் சிட்டி”, தமிழ்நாடு தான் “கிளீன் ஸ்டேட்” என்று சொல்ல வேண்டும்! அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும்! இந்த நிலையை நாம் உடனே அடைந்துவிட முடியாது. நன்றாக தெரியும். ஏனென்றால், இதற்கு பல நடைமுறை சிக்கல்களும், தடைகள் எல்லாம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை! இருந்தாலும், நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புவது, இப்போது கூட சமீபத்தில், ஜெர்மனி நாட்டிற்கு சென்று வந்தேன். அதற்குப் பிறகு வெளியிட்ட ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ வீடியோ பதிவில் நான் சொல்லியிருந்தேன். பொது இடங்களில் தூய்மையைப் பேணக் கூடிய “Self discipline” நம்முடைய மக்களுக்கு வரவேண்டும் என்று சொன்னேன்.

பொதுமக்கள் சிறிது யோசித்துப் பார்க்கவேண்டும். நாம் நடந்து செல்கின்ற பாதை, சிறிது தூய்மையற்று இருந்தாலே, முகச் சுளிப்போடு கடந்து போவோம். ஆனால், தூய்மைப் பணியாளர்களோ, நாம் அன்றாடம் தேவையில்லை என்று தூக்கி எறிகின்ற கழிவுகளை அப்புறப்படுத்துகிறார்கள்.
இவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்த்து, அதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்காமல், பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டுவது போன்ற செயல்களை எல்லாம் செய்வது நியாயமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிலரெல்லாம் வீட்டில் இருந்து, குப்பைத் தொட்டி வரைக்கும், எடுத்துக் கொண்டு வந்த குப்பையை, குப்பைத் தொட்டியில் போடாமல், அங்கிருந்து தூக்கி எறிவது, அப்படியே அருகாமையில் போடுவது, தூரத்தில் இருந்து தூக்கி வீசுவார்கள்… இந்த பழக்கத்தை எல்லாம் ஈசியா மாற்றிக் கொள்ளலாம்!
எதிர்காலத்தில், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பதுபோல, மக்கள் அனைவரும் சுய ஒழுக்கத்தோடு நூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர்களாக முன்னேறி, குப்பைகளை ஒழுங்காக தரம் பிரித்துப் போட்டு, தூய்மைப் பணியாளர்களின் சுமை பெருமளவில் குறைக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர் என்பது மற்ற எந்தப் பணியையும் போன்ற பணியாக கருதப்படுகின்ற அளவுக்கு இவர்களுடைய கண்ணியமும், முறையான பணிச்சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!
அதற்கான முன்னெடுப்புகளை, திட்டங்களாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்… இதையெல்லாம் இவர்களுக்காக என்று சொல்லவில்லை…
பொதுவாகவே, ஒரு சமூகமாக நம்முடைய ஒழுக்கம் மேம்பட வேண்டும் என்ற அக்கறையுடன் சொல்கிறேன்! நம்மைப் பார்த்துத்தான் நம்முடைய பிள்ளைகள் நடந்து கொள்வார்கள்! நாம் Correct-ஆக நடந்து கொண்டால், அடுத்து வரக்கூடிய தலைமுறை இன்னும் Better-ஆக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு சமூகமாக நாம் நகரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்!
என்னுடைய கனவு - உங்களுடைய வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும்! உங்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்பட வேண்டும்! உங்களுடைய பிள்ளைகள் நன்றாக படித்து, உயர்ந்த பொறுப்புகளில் உட்கார வேண்டும்!
கடந்த ஆண்டு, ஒரு செய்தி வந்தது… ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்… திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா என்ற ஒரு பெண் - தூய்மைப் பணியாளரின் மகள் - அவர் படித்து, குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று, நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்! இதுதான், நான் விரும்பக்கூடிய முன்னேற்றம்!
எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகளும் படித்து முன்னேறி, பெரிய அதிகாரிகளாக பொறுப்பிற்கு வரவேண்டும்! அவர்களுக்கு நான் பணி நியமன ஆணைகள் தரவேண்டும்! இதற்காகத்தான் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
சுய ஒழுக்கம் இல்லாமல், முழுமையான வளர்ச்சியோ, சமூக மேன்மையோ அடைவதற்கு சாத்தியமே கிடையாது! அரசு தன்னுடைய கடமையை செய்யும்! மக்களும் பொறுப்பாக இருந்து, பொது இடங்களிலும், நம்முடைய மனங்களையும் தூய்மையாக வைத்திருப்போம்! அதற்காக தொடர்ந்து உழைப்போம்! தன்னலம் கருதாத தூய்மைப் பணியாளர்களின் சேவையை போற்றுவோம்!






