தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று (செப்.27) மாலையில் கரூரில் ரசிகர்களை சந்தித்தபோது, குறிப்பிட்ட நேரத்தை கடந்து அவர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நிலையில், அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பலரும் ஒருவர் மேல் ஒருவர் மோதி, கீழே தள்ளி, மிதித்து சென்ற நிலையில், அந்த கூட்ட நெரிசல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியது. தொடர்ந்து ஏராளமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கே அவர்கள் அனைவர்க்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஒரு சிலர் உயிர் பிழைத்துள்ளனர். அதே வேளையில் அதில் பலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவரை இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 ஆண்கள், 16 பெண்கள், 10 குழந்தைகள் என 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே நேற்றே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர். தொடர்ந்து போர்க்கால நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கவும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதோடு, இரவோடு இரவாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
"இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை…"