தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை (Coimbatore Master Plan 2041) வெளியிட்டார்.
1287 சதுர கிமீ பரப்பளவுள்ள கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதிக்கான முதல் முழுமைத் திட்டத்துக்கு 12.10.1994 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், இரண்டாவது முழுமைத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு 13.01.2024 அன்று அரசின் அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி பெறப்பட்ட வரைவு முழுமைத் திட்டம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டன.
தற்போது, மாநகராட்சி, நான்கு நகராட்சிகள் (மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலூர் மற்றும் காரமடை), 21 நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 66 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1531.57 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட, கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதிக்கு முதன்முறையாக புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தரவுகளின் அடிப்படையில் இயங்கும், இடம்சார்ந்த, துல்லியமான நகர திட்டமிடலை கொண்டு வடிவமைக்கப்பட்டு, மாநில அளவிலான 40-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்குதாரர் ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது, தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு, முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் 2041-க்குள் 33 சதவிகித பசுமை பரப்பளவை அடைவது போன்ற அரசின் முக்கிய கொள்கைகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் – 2041, மண்டல இணைப்புகளை மேம்படுத்தல், சமூக மற்றும் பொருளாதார உத்திகள் வலுப்படுத்தல், உட்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் மேம்படுத்தல், வீட்டு வசதிகளுக்கான தேவையை பூர்த்தி செய்தல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் முறையின் மூலம், பல துறைகளின் திட்டங்களை செயல்முறைப்படுத்த தெளிவான காலக்கெடு மற்றும் திட்ட செலவு மதிப்பீட்டுடன் பகுதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன. இது திட்டங்களை நேர்த்தியாகவும், காலக்கெடுவில் செயல்படுத்தவும் வழிவகுக்கும்.
இந்த கோயம்புத்தூர் முழுமைத் திட்டம்-2041, தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட முக்கியமான அம்சமாகும். இம்முழுமைத்திட்டம், நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய மீள்தன்மை கொண்ட நகரமாக கோயம்புத்தூர் உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.