மு.க.ஸ்டாலின்

“மீனவர் நலனை காப்பது, தமிழ் சமூகத்தை காப்பதற்கு சமம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பேருரை!

திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

“மீனவர் நலனை காப்பது, தமிழ் சமூகத்தை காப்பதற்கு சமம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பேருரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.05.2025) சென்னை, திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆற்றிய உரை,

272 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய 400 ‘கில் நெட்’ படகுகள் - 250 ஃபைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு, 60 ஆயிரம் டன் மீன்களை கையாளக் கூடிய வசதிகளுடன் இருக்கும், இந்த சூரை மீன்பிடித் துறைமுகத்தை திறந்து வைத்து, உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்!

கடின உழைப்பால், தியாகத்தால், நம்முடைய பண்பாட்டின் ஒரு அடையாளமாக இருக்கக்கூடிய மீனவத் தோழர்களின் வளர்ச்சிக்கு, இந்த துறைமுகம் பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். சென்னையின் வளர்ச்சியில் பழவேற்காட்டிலிருந்து கோவளம் வரைக்கும் மீனவ கிராமங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது!

இப்படிப்பட்ட மீனவர்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது என்பது நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டை காப்பதற்கு சமம்! அந்தக் கடமையை நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது!

மீனவர்களின் நலனைக் காப்பதோடு, நம்முடைய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம்! அதனால்தான், கடந்த ஏப்ரல் 2-ஆம் நாள் சட்டமன்றத்தில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தனித் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு அது நிரந்தர தீர்வாக அமையும்!

கடந்த நான்காண்டுகளில், 97 நிகழ்வுகளில், 185 படகுகளும், ஆயிரத்து 383 மீனவர்களும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்! சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்;

படகுகளை மீட்க வேண்டும் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இதுவரைக்கும் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால், 76 கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, நேரில் சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டணி எம்.பி.,களும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி உரிமைக்குரலை எழுப்பிய காரணத்தால்தான், இதுவரைக்கும் ஆயிரத்து 354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்! எஞ்சிய 29 மீனவர்களையும் மீட்டு, தாயகம் அழைத்துகொண்டு வருவதற்கான தொடர் நடவடிக்கைகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்! இந்த நிலையிலும், 2018-ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்த 229 படகுகளை இலங்கை அரசு இதுவரைக்கும் விடுவிக்கவில்லை.

ஒருபக்கம் அவற்றை மீட்பதற்கான அரசியல் போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும், இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், 26 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வீதமும் என்று 6 கோடியே 84 இலட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்!

இந்தத் தொகையை ஆறு இலட்சம் ரூபாயாக முதலில் உயர்த்தி, இப்போது எட்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறேன்!

2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், சிறைபிடிக்கப்பட்ட இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 73 விசைப்படகுகளுக்கு 8 இலட்சம் ரூபாய் வீதமும், 9 நாட்டுப் படகுகளுக்கு 2 இலட்சம் ரூபாய் வீதமும் உயர்த்தப்பட்ட விகிதத்தில், மொத்தம் 6 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது!

இப்படி, மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கும் அரசாக ஆதரவுக்கரம் நீட்டக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருந்து கொண்டிருக்கிறது! இந்த இன்னல்கள் எல்லாம் தீர கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி!

மீனவர்களின் நலன் காக்க நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால்,

தமிழ்நாடு மீனவர் நலவாரியம் வாயிலாக, 19 ஆயிரத்து 997 பயனாளிகளுக்கு, பல்வேறு நிவாரணம் மற்றும் உதவித் தொகை திட்டங்களின்கீழ் 25 கோடியே 68 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் 121 மீன்வள உட்கட்டமைப்பு அந்த பணிகளுக்காக மொத்தம் 1,849 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

46 புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்க 626 கோடியே 12 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 34 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

29 மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகளுக்காக 85 கோடியே 52 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 17 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

11 புதிய மீன் பண்ணைகள் கட்டுமான பணிகளுக்கு 49 கோடியே 79 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 9 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

இப்போது இருக்கக்கூடிய 14 அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த 46 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 13 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

“மீனவர் நலனை காப்பது, தமிழ் சமூகத்தை காப்பதற்கு சமம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பேருரை!

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்கள் அமைப்பது குறித்த 12 ஆய்வுப் பணிகளுக்கு 9 கோடியே 45 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 7 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.

8 கோடி ரூபாய் செலவில், 2 பயிற்சி நிலைய பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

7 மீன்பிடித் துறைமுகப் பணிகளுக்கு 258 கோடியே 20 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, 4 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

மற்ற பணிகள் எல்லாம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 2023-ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் மீனவ மக்களுக்காக ஒரு சிறப்பு மாநாட்டை நடத்தி அதில் நான் கலந்துகொண்டேன். ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மீனவர் நலத்திட்டங்களை அந்த மாநாட்டில் நான் அறிவித்தேன். அந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்று நான் மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில், 518 கோடியே 53 இலட்சம் ரூபாய்க்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படக்கூடிய வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில், 4 இலட்சத்து 34 ஆயிரத்து 668 கிலோ லிட்டர் அளவுக்கு மானிய டீசல் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.

மீன்பிடி நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்படுகின்ற வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராக உயர்த்தப்பட்டு, 12 ஆயிரத்து 592 மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்படக்கூடிய தொழிலக மண்ணெண்ணெய் 3 ஆயிரத்து 400 லிட்டரில் இருந்து 3 ஆயிரத்து 700 லிட்டராக உயர்த்தப்பட்டு, 5 ஆயிரத்து 930 நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்படுகிறது.

மீன்பிடிக் கலன்களை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ், 12 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் மானியத்தில் 1,000 உள் மற்றும் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மீனவர்களுக்காக கட்டப்பட்ட 8 ஆயிரத்து 561 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.

1 இலட்சத்து 20 ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் தொழில் புரிய உழவர் கடன் அட்டை, கூட்டுறவுக் கடன், மகளிர் திட்டம், சுயஉதவிக் குழு கடன் ஆகியவற்றின் கீழ் 1,528 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

தங்கச்சிமடம், குந்துகால், பாம்பன் ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 356 கோடியே 50 இலட்சம் ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பணிகளை எல்லாம் விரைவில் தொடங்கப் போகிறோம்.

மீனவர்கள் துயரங்களை எதிர்கொள்ளும் தருணங்களில் உங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதில் முனைப்போடு இன்றைக்கு திராவிட மாடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் கடலில் மீன்பிடிக்கும் போது அண்டை நாட்டு அரசால் கைதுசெய்யப்படும் மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தின உதவித் தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தினோம். பிறகு, 500 ரூபாயாகவும் உயர்த்தினோம்.

‘மாண்டஸ்’ புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கான நிவாரணத் தொகையாக 4 கோடியே 67 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்ததால், எண்ணூர் மற்றும் அதை சுற்றியிருக்கும் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிபடகுகள், வலைகள் சேதமடைந்ததை தொடர்ந்து, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக 3 கோடியே 66 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக இதையெல்லாம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

“மீனவர் நலனை காப்பது, தமிழ் சமூகத்தை காப்பதற்கு சமம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பேருரை!

அதுமட்டுமல்ல, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சேதமடைந்த மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களுக்கான நிவாரணத் தொகையாக

14 கோடியே 53 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மீனவர் குழு விபத்து காப்பீடு இல்லாத காலத்தில், இறந்த 176 இறந்த மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய், நிரந்தர உடல்குறைபாடு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மீனவருக்கு 1 இலட்சம் ரூபாய் என்று மொத்தம் 3 கோடியே 53 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது.

அண்மை கடற்பகுதியில் மீன்வளத்தை அதிகரிப்பதற்காக, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், 49 மீனவ கிராமங்களில், 200 செயற்கை மீன் உறைவிடங்கள், 62 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டிருக்கிறது.

மிதவைகள் மற்றும் கயிறு மூலம் கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ள 1,863 மீனவ மகளிருக்கு 2 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது.

மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 127 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் ‘ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல்பாசி பூங்கா’ அமைக்கும் திட்டத்தின் நாம் நிறைவேற்றுவதற்காக அந்தப் பணியை இன்றைக்கு விரைந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மிதவை கூண்டுகளில் கடல் மீன் வளர்ப்பு, கடல் மீன்குஞ்சு வளர்த்தெடுத்தல் மையம், நவீன உயிர்க்கூழ்ம குளங்களில் இறால் வளர்த்தல், உவர்நீர் இறால் வளர்ப்புக்கு புதிய குளங்கள் கட்டுதல் போன்ற திட்டங்களின்கீழ் 3 கோடியே 88 இலட்சம் ரூபாய் மானிய உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படி நாம் சொல்லிகொண்டே போகலாம். மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அளவுக்கு எந்த மாநிலமும் இதுவரை இப்படிப்பட்ட காரியங்களை செய்ததில்லை. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நான் சொல்ல முடியும்! இன்னும் சொல்கிறேன் - மீனவர்களின் நலனுக்காக இன்னும் செய்ய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்!

மீனவர்களின் வாழ்க்கை அல்லல் நிறைந்ததாக இருக்கக் கூடாது. உங்களின் தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்; இந்தத் தொழில் எதிர்காலத்திற்கும் பயனளிக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என்றுதான் ஏராளமான திட்டங்களை உருவாக்கி இன்றைக்கு செயல்படுத்திகொண்டு இருக்கிறோம்!

கல்வியறிவுதான் எல்லோரும் கரை சேருவதற்கான கலங்கரை விளக்கம்! அதனால்தான், மீனவச் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் இந்திய குடிமைப் பணியில் சேர நினைத்தால், அவர்களுக்கு பயிற்சி தர முடிவெடுத்து, இந்த ஆண்டு மட்டும் 39 மீனவ மாணவர்களுக்கு 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் பயிற்சி தந்திருக்கிறோம்!

இப்படி பார்த்துப் பார்த்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்; எல்லா சமூக மக்களும் முன்னேற வேண்டும் என்று எல்லோருக்கும் சம அளவில், சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்! திட்டங்களை உருவாக்கித் தருகிறோம்! எனவே, திராவிட மாடல் அரசின் திட்டங்களை மீனவச் சமுதாயத்தின் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories