இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பலரும் பாடுபட்டாலும், அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறார். இதனால் தான் காந்தியை ந்தியாவின் தந்தை என்கிறோம். 1869-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்த இவர், 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ம் தேதி மாலைடில்லி பிர்லா மாளிகை தோட்டத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் ஜன.30-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம்.
இந்த நிலையில் காந்தியடிகளின் 78-வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள, அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு நாள் உறுதிமொழி :
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.
அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.