மு.க.ஸ்டாலின்

"மோடி போல மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை" - முதலமைச்சர் விமர்சனம் !

மோடி போல மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"மோடி போல மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை" - முதலமைச்சர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்னார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்துள்ள ஒரே மாநிலக் கட்சி என்ற வரலாற்றுக்குச் சொந்தமான - இனமான எழுச்சி இயக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய, வடசென்னை தொகுதிப் பரப்புரைக்கும் சேர்த்தே வந்திருக்கிறேன்.

பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த மண், திருவள்ளூர்! அந்த மண்ணில், இரண்டாம் விடுதலைப் போராக நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். வெற்றி என்றால், சாதாரண வெற்றியல்ல! கடந்த 2021-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு சதவீத வெற்றியைத் தந்தீர்கள். அது போன்று இருக்கவேண்டும். வரிசை எண்ணில் தமிழ்நாட்டில் முதல் தொகுதி திருவள்ளூர் அதேபோல், வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்திலும் முதல் தொகுதியாக இருக்கவேண்டும்.

கழகக் கோட்டையான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில், வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சசிகாந்த் செந்தில் அவர்கள். அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்தவர். தனது அறிவாற்றலால் காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றிக்காக உழைப்பவர். சமூகநீதி - சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட இவரை திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களித்து, தங்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை, தி.மு.க. தொடங்க ஆலோசனை நடைபெற்ற மண்ணடி, பவளக்காரத்தெரு, கொட்டும் மழையில் தி.மு.க. தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா, இன்று கழகத்தின் இதயமாக இயங்கும் அறிவாலயத்திற்கு முன்பு, கழகத்தின் உயிர்த்துடிப்பாக இயங்கும் அறிவகம், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் ஈந்த தியாக மறவர்களான நடராசன் தாளமுத்துவைப் போற்றும் நினைவிடம் அமைந்துள்ள மூலக்கொத்தளம் எனத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும் சேய்க்குமான உறவு!

இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால், பெருமையோடு பூரிப்போடு சொல்லவேண்டும் என்றால், நான் முதலமைச்சர் ஆக, என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூரை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி! அப்படிப்பட்ட வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்கள், தலைவர் கலைஞரின் நிழலாக இருந்த அண்ணன் ஆர்க்காட்டாரின், அருமை மகன்! மக்கள் பிணியை போக்கும் புகழ்பெற்ற மருத்துவரான இவர், சமூகப்பிணியை போக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார். அவரின் குரல் தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும்! அதற்கு வடசென்னை மக்கள், உதயசூரியன் சின்னத்தில் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு, வாக்களித்து வெற்றிபெற வைக்கவேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றம் அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம்! பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம்! ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல்! மிக மிக முக்கியமான தேர்தல்! ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்கவேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்கவேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்கவேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா - வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார்! இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார்! அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்!

கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு! நாட்டுக்கும் கேடு!

"மோடி போல மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை" - முதலமைச்சர் விமர்சனம் !

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே... வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”என்று கூறினேன். மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் பிரச்சினைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு தி.மு.க.வும் - காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்!

தெற்கிலிருந்த நம்முடைய குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக எதிரொலித்திருக்கிறது! முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய்!

நீட் தேர்வு ரத்து!

ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தச் சட்டத்திருத்தம்!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்வு!

பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை!

இத்துடன், நம்முடைய தேர்தல் அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளையும் தலைப்புச் செய்தியாக சொல்கிறேன்.

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்!

கோயம்பேடு முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரயில்!

விம்கோ நகரில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு!

வடக்கில் இருந்து வரும் ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை!

வில்லிவாக்கம் ரயில்நிலையத்தில் இருந்து, தெற்குப் பக்கமாகச் செல்ல சுரங்க நடைபாதை!

மணலியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை!

செங்குன்றத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க, உயர்மட்ட மேம்பாலம்!

பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை!

இதுமட்டுமல்ல, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி!

சிறுபான்மையினர் விரோத சட்டங்கள் ரத்து!

விவசாயக் கடன்கள் தள்ளுபடி!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

நூறுநாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்வு! நாளொன்றுக்கு 400 ரூபாய் ஊதியம்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு இரயிலில் மீண்டும் கட்டணச்சலுகை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு!

மீனவ மக்கள் நிறைந்த பகுதி இது! அவர்களுக்காக அறிவிக்கப்பட்டவை, உலர்மீன் முற்றங்கள் கட்டுதல் போன்ற மீனவர்களுக்குத் தேவையான தொழில் கட்டமைப்புப் பணிகள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்!

பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!

தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்கப்படும்!

மீன்பிடி தடைக்காலங்களில் மாற்றுப் பொருளாதார வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்கள் பதப்படுத்துதல், மீன்வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள்!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்., இப்படி, தி.மு.க. - காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலின் “ஹீரோ”என்றால், பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ‘வில்லன்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று ஏன் சொல்கிறோம் என்றால், மத அடிப்படையில் இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கிறார்கள்!

நாட்டிற்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்துக்கான டிரெய்லர்தான், பொது சிவில் சட்டம்! மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல – ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகவும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இருக்கிறது. ”ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப் போகிறோம்”என்று 2019 தேர்தல் அறிக்கையில் கூறியதை, மறுபடியும் காப்பி – பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில், நாப்கினுக்கு ஜி.எஸ்.டி போட்டதுதான் பா.ஜ.க. ஆட்சி! அந்த வரியை நீக்க நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள்தான் குரல் கொடுத்தார்கள்! போராடினார்கள்!

அதுமட்டுமல்ல, இன்றைக்கும் விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராடிக்கொண்டு இருக்கிறார்களே! அவர்களுக்கு ஏதாவது வாக்குறுதி அறிவித்திருக்கிறார்களா? இல்லையே! விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று கூறினார்கள்! அதை முதலில் செய்தார்களா? இல்லை! பா.ஜ.க.விடம் பத்தாண்டுகள் சாதனை என்ற சொல்லவும் எதுவும் இல்லை! அடுத்து செய்யப்போகிறோம் என்று சொல்ல சரியான வாக்குறுதியும் இல்லை!

இந்த இந்தியத் துணைக் கண்டத்தில், மரியாதைக்குரிய நேரு தொடங்கி மோடி வரைக்கும், 14 பேர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, E.D. – I.T. – C.B.I. வைத்து மிரட்டிக் கட்சியை உடைக்கிறது, எம்.எல்.ஏ, எம்.பி.க்களை வாங்குவது, முதலமைச்சர்களைக் கைது செய்வது, தொழிலதிபர்களை மிரட்டித் தேர்தல் பத்திரம் வாங்குவது., பி.எம். கேர்ஸ் என்று தனியார் அறக்கட்டளை வைத்து நிதிவாங்குவது என்று, வசூல் செய்த ஒரே ’வசூல்ராஜா’ மோடி ஒருவர்தான்!

வாயைத் திறந்தாலே சாதி – மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தித்தான் பேசுகிறார்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், முஸ்லீம் லீக்கின் அறிக்கை என்று விமர்சித்து, பிரிவினைவாதம் பேசினார்! இப்போது, இன்னும் கீழே இறங்கிச் சென்று, மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார்! பதவியில் தொடர முடியாது என்ற வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்! உணவு என்பது தனிநபர்களின் விருப்பம்! அடுத்த மனிதர் என்ன சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்ய மோடிக்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமையில்லை!

இப்படியெல்லாம், ஒரு பிரதமர் பேசுவாரா? வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்யும் மனிதரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை! அதனால்தான் கூறினேன். பா.ஜ.க. இந்த நாட்டுக்கு வில்லன்! நாட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் சுய விளம்பரத்திற்கு மட்டும்தான், பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார்!

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி கொடுத்தாரே, ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்களில் 83 விழுக்காடு பேர் இளைஞர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது! நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய M.S.M.E.-க்கள் ஜி.எஸ்.டி-ஆல் நலிவடைந்துவிட்டதே! அதைச் சரி செய்ய வேலை செய்தாரா? இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது – தாக்கப்படுவது – அதிகமானதே! அதைட்க் தடுக்காமல், விஷ்வகுரு என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏன் மவுனகுருவாக இருந்தார்!

தேர்தலுக்காகத் தமிழ்நாட்டுப் பக்கம் தலையைக் காமிக்கவேண்டுமே! தமிழ்நாட்டிற்கு சொல்வதற்கு என்று ஒரு சிறப்புத் திட்டமாவது செய்திருக்கிறாரா! ஒரு செங்கல்லைக் காட்டி கேள்வியாகக் கேட்கிறார்களே! அந்த எய்ம்ஸ் மருத்துவமனையையாவது தேர்தலுக்கு முன்னால் கட்டிமுடித்துவிடுவோம் என்று எண்ணம் வந்ததா?

சரி அட்லீஸ்ட், என்னடா தமிழ்நாட்டு மக்கள் பெருவெள்ளத்தில் தவிக்கிறார்களே! உயிரையும் – உடைமைகளையும் – வீடுகளையும் இழந்து அவஸ்தைப்படுகிறார்களே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்று மாநில அரசு நிதி கேட்கிறார்களே! மாநில முதலமைச்சரே நேரில் வந்து, கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றரே! என்று நிதியாவது கொடுத்தாரா? இல்லை! இப்படி எதையும் செய்யாமல் நம்முடைய திராவிட மாடல் அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்த 6000 ரூபாயும், ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் பிச்சை என்று சொல்ல வைக்கிறார்!

இந்த லட்சணத்தில், சென்னைக்கு ஏதோ ‘ஷோ’ என்று வந்தார்! என்ன ஷோ அது? ரோடுஷோ இப்படி ஷோ காட்டிவிட்டுப் போக வெட்கப்பட வேண்டாமா? அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என்ற சொல்லுவார்களே! அப்படி, நேற்று ஒன்று சொன்னார்கள்! கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டிற்குப் பத்து இலட்சம் கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக பச்சைப் பொய் சொல்கிறார்கள்! நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால், 29 பைசா மட்டும் திருப்பித் தந்துவிட்டு, நேற்று ஒரு கணக்கு காட்டியிருக்கிறார்கள்! எல்லாம் பொய்க் கணக்கு!

உதாரணத்திற்குச் சொல்கிறேன். நான் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒருபைசா கூட பணம் தராததுதான்!

அப்படியும் பணிகளை முடித்தாக வேண்டுமே! திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமே என்று மாநில அரசே நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டு பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால், நம் அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது!

இப்படி நிதிநெருக்கடியை உருவாக்கிவிட்டு, சர்வசாதாரணமாகப் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்! இங்கே மீனவர்கள் பலர் வந்திருக்கிறீர்கள்! சாகர்மாலா திட்டத்திற்கு 2 இலட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பணிகள் எங்கேயாவது நடந்து பார்த்திருக்கிறீர்களா?

அதுமட்டுமல்ல, ஒற்றைச் செங்கல்லோடு நிற்கும் எய்ம்ஸ்க்கு 1,960 கோடியாம்! அதற்குத்தான் கேட்டேன். நீங்கள் பேசும் எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காது பாவமில்லையா! தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சிக்கு ரிப்போர்ட்கார்டு கொடுக்கமுடியாத பிரதமர் மோடி – எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார்!

"மோடி போல மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை" - முதலமைச்சர் விமர்சனம் !

அவரிடம், சொல்லச் சாதனைகள் இல்லை! ஒன்றியத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழ்நாட்டிற்கு என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்று நானும் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, இங்கு சென்னைக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்! மதுரவாயல் – துறைமுகம் இடையே பறக்கும் சாலைத் திட்டம்! சென்னை துறைமுகத்தையும் – எண்ணூர் துறைமுகத்தையும் இணைக்கும் சாலையை அகலப்படுத்தும் திட்டம்! கத்திப்பாரா, பாடி என்று பல்வேறு மேம்பாலங்கள்! நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்! இப்படி நிறைய இருக்கிறது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு இதுபோன்ற திட்டங்களைத் தரும் பிரதமர்தான் நமக்கு வேண்டும்! அதற்கு நீங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.

நான் தொடர்ந்து தெம்போடும் துணிச்சலோடும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லி கொண்டு இருக்கிறேன். பயனடைந்த பயனாளிகள் சொல்வதைத்தான் சொல்கிறேன்.

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதநிகழ்ச்சி. அதில், ஒரு சகோதரி பேசியிருக்கிறார். “என் கணவர் என்னை கைவிட்டுவிட்டார்! எல்லா ஆவணங்களையும் எடுத்து கொண்டு போய்விட்டார். எட்டு வருடமாக என்னால் ரேஷன் கார்டை மீட்க முடியவில்லை! கணவனால் கைவிடப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் ரேஷன்கார்டு வாங்குவதில் பெரிய பிரச்சினை இருந்தது. ஏன் என்றால், குடும்பத் தலைவர் என்று அவர் பெயர் இருக்கும். நம்பரும் அவருடையதாக இருக்கும். அவர்களிடமிருந்து ரேஷன்கார்டை மீட்க டைவர்ஸ் வாங்கியிருக்க வேண்டும். டைவர்ஸுக்குக் கோர்ட்டுக்கு அலைவேனா.. என் உடல்நலனை பார்ப்பேனா? ஆனால், என்னிடம் உண்மை இருக்கிறது என்ற நம்பிக்கையோடு அலைந்தேன். அப்போதுதான் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று வந்த ஒரு அரசாணையைப் பற்றிக் கேள்விபட்டேன்.. இந்த மாதிரி பிரச்சினை இருந்தால், விசாரணை நடத்தித் தாசில்தாரே கணவர் பெயரை நீக்கிவிட்டு ரேஷன்கார்டைக் கொடுக்கலாம். அதை வைத்துக்கொண்டு, தாசில்தார் எல்லாவற்றையும் விசாரித்து, ஐந்தே நிமிடத்தில் எனக்கு ரேஷன் கார்டு கொடுத்தாங்க” என்று தழுதழுத்த குரலோடும் கண்ணில் கண்ணீரோடும் அந்த சகோதரி பேசினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியிருக்கிறது.

என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் – ஒவ்வொரு அரசாணையும் – ஒவ்வொரு சட்டமும் – கோடிக்கணக்கான மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது! விளிம்பு நிலையில் வாழும் குரலற்றவர்களின் வாழ்க்கையை ஒருபடியாவது முன்னேற்ற உதவுகிறது!

இன்னொரு காணொலி, அதில், யார் அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும்! என்று யூடியூப் சேனலில், ஒரு அம்மாவிடம் கேள்வி கேட்கிறார்கள். ”ஸ்டாலின் வரவேண்டும் என்று நினைக்கிறோம். வேலைக்குப் போனாலும் - போகாவிட்டாலும் – பெற்ற பிள்ளை கொடுக்காவிட்டாலும் - ஸ்டாலின் எங்களுக்கு மகனாக இருந்து 1000 ரூபாய் கொடுக்கிறார். அவர்தானே பலரை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகிறார். இதற்கு மேல் என்ன செய்வார்.” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இப்படி ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் முகங்களில் சிரிப்பை வரவைப்பதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கான ஊக்கமாக நான் எடுத்து கொள்கிறேன்.

இதுபோன்று, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் மகளிரும், எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்கும் தாய்வீட்டுச்சீர் என்று பாசத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைக் கொண்டாடுகிறார்கள். உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்து, உள்ளூர் சிறுவணிகர்களின் வியாபாரமும் பெருகி இருக்கிறது.

இது சமூகப்புரட்சித் திட்டம் மட்டுமல்ல! பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது.

அடுத்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சியாக, நாங்கள் ஸ்டாலின் அய்யா பஸ்ஸில், இலவசமாகப் பயணம் செய்கிறோம் என்று சொல்லக்கூடிய விடியல் பயணம் திட்டம்!

அத்துடன், கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு, மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்!

வெளியூரில் வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’!

விரைவில், மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம்!

இளைஞர்களுக்குத் திறன்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுத்தரக் கூடிய ”நான் முதல்வன்” திட்டம்!

ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைந்திருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்!

2 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி, அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்றி இருக்கும் ”இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்” ! இப்படி ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

நம் சென்னையைப் பொறுத்தவரை, நான் மேயராக – உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக வடசென்னையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், இப்போது முதலமைச்சர் ஆனதும், குறிப்பாக வடசென்னைப் பகுதியை வளர்த்தெடுக்க வேண்டும் என்று, 4 ஆயிரத்து 189 கோடி ரூபாயில் 11 அரசுத் துறைகளின் திட்டங்களை, இங்கு மேடையில் இருக்கும் மாண்புமிகு சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் தொடங்கி வைத்தோம்.

இப்படி நாம் ஒரு பக்கம் சாமானிய, ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்காகப் பார்த்துப் பார்த்து பலதிட்டங்களை ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியிலிருந்து நிறைவேற்றிக் கொண்டு இருந்தால், இன்னொரு பக்கம் அவர்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் திட்டங்களையும், சட்டங்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள்.

நடுத்தர வர்க்க மக்கள் என்ன செய்கிறார்கள்? ஹோட்டலிலிருந்து டூவீலர் வாகனத்தைப் பழுது பார்க்கிறவரை, எல்லாவற்றிற்கும் G.S.T.! ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்ட பில்லை வாங்கிப்பார்த்தால், கூடுதலாக, ஒருதொகை இருக்கும். G.S.T. தொகை என்று அதைப் பார்த்துவிட்டு மக்கள் என்ன கேட்கிறார்கள்?

”கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாயை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், சாமானிய மக்கள் மேல் இவர்களுக்கு கொஞ்சம்கூட கருணையே கிடையாதா?- என்று மக்கள் புலம்புகிறார்கள்.

இப்படி மக்கள் சொல்கிறார்கள் என்று மீடியாவில் கேட்டால், “ஹோட்டலில் ஏன் சாப்பிடுகிறீர்கள். வீட்டில் சாப்பிட ஜி.எ.ஸ்.டி வரி எதுவும் இல்லையே!” என்று திமிராக பதில் சொல்கிறார் நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன். போகும் போக்கை பார்த்தால், மக்கள் நிறைய செல்பி எடுக்கிறார்கள் என்று, இனி, செல்பி எடுக்கவும் இவர்கள் ஜி.எ.ஸ்.டி போட்டாலும் போடுவார்கள்!

மாநில முதலமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி.யைக் கடுமையாக எதிர்த்தவர்தான் மோடி அவர்கள். “இதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. என் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று கர்ஜித்தார்.

ஆனால், பிரதமர் ஆனதும் என்ன சொல்கிறார்? ஜி.எஸ்.டி வரி என்பது பொருளாதாரச் சுதந்திரம் என்று சொல்கிறார். ஜி.எஸ்.டி.யில் கிடைக்கின்ற மொத்த வருவாயில், 64 சதவீதம் அடித்தட்டு மக்களிடம் இருந்தும்; 33 சதவீதம் நடுத்தர மக்களிடம் இருந்தும் வசூல் செய்யப்படுகிறது. வெறும் 3 சதவீதம்தான், பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது.

பிரதமர் மோடி சொன்னது போன்று G.S.T. யாருக்குப் பொருளாதார சுதந்திரமாக இருக்கிறது என்றால், அவருடைய நண்பர்களான கார்ப்பரேட்களுக்கு மட்டும்தான்!

இப்படி நாம் இந்த மக்கள்விரோத நடவடிக்கைகளை எதிர்த்துகொண்டு இருந்தால், பழனிசாமி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டினுடைய எல்லா உரிமைகளையும் மொத்தமாக பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டார்! அதனால்தான், அ.தி.மு.க. அடிமை ஆட்சி என்று அவருடைய ஆட்சியை விமர்சித்தோம்.

எடுத்துக்காட்டாக, சில நிகழ்வுகளை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சிறுபான்மையினருக்கு எதிரான CAA சட்டத்தை ஆதரித்து ஓட்டுபோட்டது அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஓட்டு போட்டது மட்டுமில்லாமல், “இந்தச் சட்டத்தால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள்? என்று சட்டமன்றத்திலேயே ஆணவமாகக் கேட்டவர்தான் பழனிசாமி.

அதுமட்டுமில்லாமல், இதே வடசென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நான் உள்பட, மரியாதைக்குரிய ப.சிதம்பரம், தோழர் பாலகிருஷ்ணன், சகோதரர் திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தம்பி உதயநிதி- என்று 8000 பேர் மேல் F.I.R. போட்டதுதான் பழனிசாமி ஆட்சி. பெண்கள், குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் எல்லோர் மேலும்ட் தடியடி நடத்தி ரசித்தார் பழனிசாமி.

இரண்டாவது எடுத்துக்காட்டு, மூன்று வேளாண் சட்டங்கள்! இதையும் ஆதரித்து உழவர்களுக்கு துரோகம் செய்த புண்ணியவான்தான் பழனிசாமி. பாஜகவுக்கு விசுவாசத்தை காட்டும் வேகத்தில், இன்னும் ஒருபடி மேலே போயி, “இந்த சட்டம் வந்தால் நம் விவசாயிகள் உத்தரபிரதேசம் சென்று வியாபாரம் செய்யலாம். இதை எதிர்ப்பவர்கள் விவசாயிகள் இல்லை, புரோக்கர்கள்”- என்று விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.

இத்துடன் நிறுத்தினாரா? இல்லை! அய்யன் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்- என்று தமிழ்நாடு பெரிதும் மதித்துப் போற்றும் ஆளுமைகள் மேல் பா.ஜ.க காவிச்சாயம் பூசியதைக் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்தார்.

இவ்வளவு ஏன்? தன்னுடைய சொந்தக்கட்சித் தலைவரான எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பா.ஜ.க. காவிச்சாயம் பூசியதையே கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் பழனிசாமி. அவர்தான், இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வின் உத்தரவுப்படி, பி-டீமாக நிற்கிறார்.

"மோடி போல மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை" - முதலமைச்சர் விமர்சனம் !

இதுகூட, அவருடைய சொந்த முடிவு இல்லை. பா.ஜ.க எழுதிக்கொடுத்த ஸ்க்ரிப்ட்டில் இவர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடிக்கிறார். பழனிசாமியின் வேடமெல்லாம் மக்களிடம் எப்போதும் எடுபடப் போவது இல்லை!

இந்தத் தேர்தலில் INDIA கூட்டணியை வெற்றி பெற வைக்க இந்தியா முழுவதும் எல்லா மாநில மக்களும் தயாராகிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் சுற்றுப்பயணம் போய்விட்டு சென்னை வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக, பெண்கள் தருகிற ஆதரவு பிரமிக்க வைக்கிறது. சென்னையும் திருவள்ளூரையும் 10 ஆண்டு ஆட்சியில் பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் முழுமையாகப் புறக்கணித்தார்கள். அதனால்தான் 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் அவர்கள் இண்டு பேரையும் மொத்தமாக ஒதுக்கி, தி.மு.க. கூட்டணிக்கு முழுவெற்றியை தந்தீர்கள். அது இந்தத் தேர்தலிலும் தொடர வேண்டும்!

சென்னையும், திருவள்ளூரும் வளரக்காரணம் தி.மு.க. ஆட்சி! இந்தப் பகுதியை எப்போதும் கண்டுகொள்ளாத ஆட்சி அ.தி.மு.க. – பா.ஜ.க. ஆட்சி! இதனை மனதில் வைத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த் செந்தில் அவர்களுக்குக் கை சின்னத்திலும், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் நீங்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களில் ஒருவனாக - உங்களுக்காகவே உழைத்த தலைவர் கலைஞருடைய மகனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம் எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்.

நாற்பதும் நமதே! நாடும்நமதே!

நாற்பதும் நமதே! நாடும் நமதே!

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories