மு.க.ஸ்டாலின்

“பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை : அதிகாரிகளை காப்பாற்றும் பழனிசாமி அரசு” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை : அதிகாரிகளை காப்பாற்றும் பழனிசாமி அரசு” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பும் வழியில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறப்பு டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமி ஆட்சியில், பெண் போலிஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் "முதலமைச்சர் சுற்றுப் பயணத்திற்கு பாதுகாப்புக்குச் செல்லும் போதே, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுக்கும் தைரியத்தை சிறப்பு டி.ஜி.பி.யே பெற்றிருப்பது அசிங்கத்தின் உச்சபட்சம்; ஆணவத்தின் வெளிப்பாடு. ஊழல் வழக்குகளில் ஒத்துழைப்பதற்காக இதுபோன்ற காவல்துறை அதிகாரிகளை முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்றுவது வெட்கக்கேடு; பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும், அ.தி.மு.க.வினரையும் பாதுகாக்கும் முதலமைச்சர் பழனிசாமி, பெண்ணினத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

“தினகரன்” மற்றும் ஆங்கில “தி இந்து” பத்திரிகையில் இன்றைய தினம் “பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது புகார்” என்று செய்தி வெளிவந்திருக்கிறது. தங்களுக்கு நேரும் அநீதியை - சந்திக்கும் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லவே பெண்கள் பயந்து தயங்கும் நேரத்தில், இந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தனது சீனியர் போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த பெண் போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரியின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன்.

முதலமைச்சர் புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் நிகழ்ந்த இந்த பாலியல் தொல்லை - தமிழகக் காவல்துறைக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மையான – கண்ணியமான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியாற்றும் தமிழகக் காவல்துறையில் இதுபோன்ற விரல் விட்டு எண்ணும் சில புல்லுருவி போலீஸ் அதிகாரிகளால் “யூனிபார்மில் உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை” என்று உருவாகியுள்ள நிலையைப் பார்த்து, அத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திலேயே அ.தி.மு.க.வினரைக் காப்பாற்றிய முதலமைச்சர், “பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி” என நடத்தி வரும் பிரச்சாரத்தைப் பொய்யாக்கி விட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் இது முதல் புகார் அல்ல. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த ஐ.ஜி. முருகன் மீது, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்தார். அதையும் மூடி மறைத்தார் முதலமைச்சர். உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு சி.பி.சி.ஐ.டி.யில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதிலும் பாதுகாத்து, இன்றுவரை அந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது சட்ட விரோத உத்தரவுகளை நிறைவேற்றவும் இதுபோன்ற பாலியல் தொந்தரவில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளை முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்றுகிறார். அதன் விளைவு - இன்றைக்குப் பேச வேண்டும் எனத் தனது காருக்குள் அழைத்து ஒரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் தைரியத்தை காவல்துறையில் உள்ள சிறப்பு டி.ஜி.பி.யே பெற்றிருப்பது கேவலமானது. அதுவும், முதலமைச்சரின் பிரச்சாரப் பாதுகாப்பிற்குச் செல்லும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியே, இப்படியொரு அத்துமீறலில் ஈடுபட்டுள்ள, அசிங்கத்தின் உச்சபட்சம் - நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு!

தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு முதலமைச்சர் உருவாக்கியுள்ள இந்த இழிநிலையைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து - சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை சஸ்பெண்ட் செய்து - கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இதுபோன்ற போலீஸ் அதிகாரியைப் பாதுகாத்து தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண் போலீசார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்க முயற்சித்தால் - திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories