மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நல உதவிகளை வழங்கி உரையாற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொளத்தூர் தொகுதியில் இருப்பது போன்ற அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இன்று (10-02-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நல உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

வார்டு 69 - சிறுவள்ளூவர் சாலை, எஸ்.ஆர்.இ.எஸ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 5-ஆவது பேட்சாக டேலி பயற்சி முடித்த 81 மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 6-ஆவது பேட்சாக டேலி பயற்சி பெற்றுவரும் 89 மாணவிகளுக்கு நோட்டு, பேனாக்கள் வழங்கினார்.

வார்டு 69 - செம்பியம் லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டுத் திடலை மேம்படுத்தி, கூடைப் பந்தாட்ட கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 500 மாணவ – மாணவியருக்கு தண்ணீர் பாட்டில் வழங்கியதுடன் 70 ஆசிரியர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்தார்.

வார்டு 69 - பந்தர் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2.5 கோடி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தைத் திறந்து வைத்தார். 500 மாணவ மாணவிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கி, 57 ஆசிரியர்களைப் பாராட்டி சிறப்பு செய்தார்.

வார்டு 69 - கபிலர் தெரு ஆரம்ப சுகாதார மையம் கூடுதல் கட்டடத்தைத் திறந்து வைத்தார். மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் என 13 நபர்களுக்கு சிறப்பு செய்தார்.

சென்னைப் பெருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை மேம்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்து 38 ஆசிரியர்களைப் பாராட்டி சிறப்புச் செய்தார்.

வார்டு 64 - பள்ளி சாலையில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட அரசினர் நடுநிலைப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை, அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களை (ஆர்.ஓ. பிளாண்ட்) ஒப்படைத்தார்.

255 நடுநிலைப்பள்ளி, மாணவ - மாணவியருக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கி, 80 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.

வார்டு 66 - ஜவஹர் நகரில் பள்ளி கல்லூரி 24 மாணவ, மாணவியருக்கு, புத்தகப் பை, தண்ணீர் பாட்டில், நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட கல்வி உதவிகளை வழங்கினார்.

கல்லூரி மாணவ, மாணவிகள் 3 பேருக்கு புத்தக பை, பேனா, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட கல்விக்கான உதவிகளை வழங்கினார்.

மேலும், மடிக்கணினி 5 பேருக்கும், 7 பேருக்கு மருத்துவ உதவியும், 7 பேருக்கு நான்கு சக்கர தள்ளு வண்டிகளும், 6 பேருக்கு மீன்பாடி வண்டிகளும், ஒருவருக்கு இஸ்திரிப் பெட்டியும், 3 பேருக்கு திருமண உதவியும், ஒருவருக்கு சக்கர மோட்டார் பொருத்திய வாகனமும் வழங்கினார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிற நேரத்தில் நான் எந்த அளவிற்குப் பெருமைப்படுகிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். எத்தனையோ பணிகளுக்கு இடையில் நான் வந்திருப்பதாக சகோதரி ஹெலன் அவர்கள் இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

எத்தனை பணிகள் இருந்தாலும் இந்தப் பணி தான் எனக்கு முக்கியமான பணி. இந்த தொகுதிக்கு வரும்போதே என்னை அறியாமல் எனக்கு ஒரு மகிழ்ச்சி வந்து விடும். அதிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி நிகழ்ச்சி என்று சொன்னால் அதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சி வந்துவிடும்.

பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும், யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது, சுயமரியாதை உணர்வோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறவன் நான்.

அந்த நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கத்தான் இந்த அகாடமியை அனிதா அச்சீவர்ஸ் என்ற பெயரில் நம்முடைய கொளத்தூரில் 2019ஆம் ஆண்டு நான் தொடங்கினேன்.

பெண்களுக்கு அவர்கள் கல்வியைத்தாண்டி ஒரு கூடுதல் தகுதி கொடுப்பதற்காகத்தான் டேலி வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்றிருக்கும் எத்தனையோ பேர் பெரிய பெரிய நிறுவனங்களில் இன்றைக்குப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்திருக்கிறது. சம்பளமும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

வேலை கிடைத்தது என்பதை விட, சம்பளம் கிடைக்கிறது என்பதை விட அவர்களுக்குத் தன்னம்பிக்கை வந்திருப்பது தான் முக்கியம். டேலி வகுப்போடு, தையல் பயிற்சி வகுப்பு, இளைஞர்களுக்குத் தனிப் பயிற்சி மையம் என்று விரிவடைந்து அனிதா அச்சீவர்ஸ் இன்றைக்கு மினி கல்லூரியைப் போல வளர்ந்து வந்திருப்பது உள்ளபடியே எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இங்கே சகோதரி ஹெலன் சொன்னது போல முதல் பேட்ச்சை பொறுத்தவரையில் 61 பேரும், இரண்டாவது பேட்ச்சை பொறுத்தவரையில் 67 பேரும், மூன்றாவது பேட்ச்சில் 71 பேரும், நான்காவது பேட்ச்சில் 67 பேரும், ஐந்தாவது பேட்ச்சில் 82 பேரும் இதுவரை அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் இதுவரை 348 பேர் பயிற்சி பெற்று வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.

இப்போது ஆறாவது பேட்ச்சில் 89 பேர் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏழாவது பேட்ச்சுக்காக 80 மாணவிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வருகிற 15-ம் தேதியிலிருந்து பயிற்சி தொடங்கப்படவிருக்கிறது. மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் 517 மாணவியர்கள் இதுவரை பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பயிற்சி பெற்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் 80 பேர் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். 80 மாணவர்கள் பயிற்சியில் இருக்கிறார்கள். 80 மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் வருகிற 15ஆம் தேதி அந்த பயிற்சி தொடங்கவிருக்கிறது.

அதேபோல தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதில் 196 பேர் இதுவரையில் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். 199 பேர் பயிற்சியில் இருக்கிறார்கள். புதிதாக 360 பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுவும் வருகிற 15-ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது.

எனவே, ஒரு குடும்பம் போல இன்றைக்கு இது வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இத்தனை குடும்பங்களுக்கும் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.

இன்றைக்குத் தமிழகத்தை பொறுத்தவரையில் வேலையில்லா திண்டாட்டம் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கு வேலை இல்லை.

வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் அலுவலகத்தில் லட்சக்கணக்கில் வேலை கேட்டுப் படித்த பட்டதாரிகள் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றி இப்போது இங்கு இருக்கும் ஆட்சிக்கு எந்தக் கவலையும் இல்லை. அதனால்தான் இன்றைக்கு இளைஞர்களின் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது.

இங்கு ஆசிரியர்கள் சொன்னதைப் போல், இன்னும் 3 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கப்போகிறோம்.

நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது உண்டு. இதை கொளத்தூரில் மட்டும் தொடங்கினால் போதாது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி போல உருவாக வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன்.

உறுதியாகச் சொல்கிறேன், தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு இந்தக் கட்சியின் தலைவர் என்கிற முறையில் இப்போதே சொல்கிறேன், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தி.மு.கழக ஆட்சியில் உருவாக்கப்படும் என்ற நல்ல செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொண்டு உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories