மு.க.ஸ்டாலின்

“தமிழகத்தின் உரிமையை மீட்டுத்தர வக்கற்ற உங்களுக்கு கோட்டை எதற்கு?”: அ.தி.மு.க அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்!

"மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்து, தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல; இந்திய விவசாயிகளுக்கே வாயில் விஷத்தை ஊற்றிய விஷக்கிருமிதான் முதலமைச்சர் பழனிசாமி" என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“தமிழகத்தின் உரிமையை மீட்டுத்தர வக்கற்ற உங்களுக்கு கோட்டை எதற்கு?”: அ.தி.மு.க அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மக்களால் ஒதுக்கப்பட்டு, சொந்தக் கட்சிக்காரர்களிடமே மரியாதையை இழந்துவிட்ட பழனிசாமி, அந்த இழப்பை சரிக்கட்டுவதற்காக, அரசுப் பணத்தில் விளம்பரங்களையும், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி போன்ற நாடகங்களையும் நடத்துகிறார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (08-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், என்.வைரம்பட்டி ஊராட்சி, காரைக்குடி – திருப்பத்தூர் சாலை அருகில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“அனைவருக்கும் மாலை வணக்கம். நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா? நான் ரெடி, நீங்கள் ரெடியா?

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளான காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு இருக்கும் மக்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். அவ்வாறு வந்திருக்கும் உங்களை எல்லாம் முதலில் தலைமைக் கழகத்தின் சார்பில் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன்.

அதற்கடுத்தது இந்த நிகழ்ச்சியை, நிகழ்ச்சியாக நடத்தாமல் ஒரு பெரிய மாநாடு போல நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர் நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்காக நான் முதலில் அவருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். இந்த சிவகங்கைச் சீமையில் நம்முடைய கழகம் காத்த காவலராக நம்முடைய பெரியகருப்பன் அவர்கள், அண்ணன் தென்னரசு, தா.கிருஷ்ணன் அவர்கள் வழி நின்று தனது பணியை நிறைவேற்றிக் கொண்டிருப்பவராக தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்போது நீங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு நுழைவாயிலில் நம்முடைய தொண்டர்கள், இளைஞர்கள், தோழர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் உங்கள் வருகையைப் பதிவு செய்து, உங்கள் கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்டு அதற்குப்பிறகு ஒரு ரசீது - அடையாள அட்டை உங்களிடம் கொடுத்திருப்பார்கள். அந்த அடையாள அட்டை மிகவும் முக்கியமானது.

விரைவில் தேர்தல் வரப்போகிறது. அந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் தி.மு.க.விற்கும், தி.மு.க. கூட்டணிக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரப்போகிறீர்கள். அந்த வெற்றியைத் தேடித் தரும்போது நாம் ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வந்து பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அடுத்த நாள் இந்தப் பெட்டி திறக்கப்படும். அதற்குப்பிறகு அதிலிருக்கும் மனுக்களெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு 100 நாட்களுக்குள் உங்களுடைய பணிகள் முடிக்கப்படும் அதற்கு இந்த ஸ்டாலின் பொறுப்பு.

நீங்கள் மனுவாகக் கொடுத்துள்ள கோரிக்கைகள் நூறு நாட்களுக்கு பிறகும் நிறைவேறாமல் இருக்கும் என்றால், அந்த அடையாள அட்டையுடன் வந்து என்னிடம் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.

இந்த அடையாள அட்டை இருந்தால் நீங்கள் நேராக கோட்டைக்குள் வரலாம். கோட்டைக்குள் மட்டுமல்ல, கோட்டைக்குள் இருக்கும் முதலமைச்சர் அறைக்குள்ளும் வரும் அதிகாரம் இந்த அடையாள அட்டைக்கு இருக்கிறது. கவலைப்படாதீர்கள்.

இப்போது இங்கு வந்திருக்கும் அத்தனைப் பேரையும் பேசவைக்க வாய்ப்பில்லை. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து இருக்கிறீர்கள். எல்லோரும் பேச வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், உங்களுடைய உணர்வுகளை, எண்ணங்களை, கோரிக்கைகளை, பிரச்சனைகளை, தெளிவாக எழுதி மனுவாகக் கொடுத்திருக்கிறீர்கள். அவை எல்லாம் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது.

ஆனால் 10 பேரை பேச வைக்க முடிவெடுத்திருக்கிறேன். பேசுகிறவர்கள் நேரத்தின் அருமை கருதி சுருக்கமாக பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த பெட்டியிலிருக்கும் மனுக்களிலிருந்து ஒவ்வொன்றாக நான் எடுப்பேன். அவ்வாறு எடுக்கும்போது யார் பெயர் வருகிறதோ அவர்கள் பெயரை அழைப்பேன். இப்போது நான் மனுக்களை எடுக்கப்போகிறேன்.“

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

“கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்தான் தந்தை பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. நான் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் பொறுப்பு ஏற்று, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாவட்டங்களிலும் அது உருவாக்கப்பட வேண்டுமென்று கலைஞர் அவர்கள் அந்தத் திட்டத்தை உருவாக்கினார்கள்.

எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக வாழவேண்டும்.

சாதி பாகுபாடு இன்றி, சாதி சமயமற்ற வகையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் அவர்கள் அந்தத் திட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் இந்த ஆட்சி வந்ததற்கு பிறகு அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. கிடப்பில் போட்டது மட்டுமின்றி பராமரிப்பு இல்லாமல் கேள்வி கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. அதைத்தான் திருமாறன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்.

எப்போதும் கலைஞர் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் பின்னால் வரும் அ.தி.மு.க. ஆட்சி, அது மக்கள் நல பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள், புதிதாக கட்டிய தலைமைச் செயலகம், சமத்துவபுரங்கள் இவ்வாறு எதுவாக இருந்தாலும் சரி, ஓரவஞ்சனையோடு, அரசியல் நோக்கத்தோடு இந்த ஆட்சி அதை ஒதுக்கி வைத்து விட்டது.

சமத்துவபுரம் என்பது கலைஞரின் கனவுத் திட்டம். கவலைப்படாதீர்கள். நிச்சயமாக ஆட்சிக்கு வந்தபிறகு சமத்துவபுரங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும், பேணிப் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் குறைகளை அன்வர் அவர்கள் மிகத்தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர் ஐந்து மாவட்ட பெரியார் வைகை பாசன ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருப்பவர்.

விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த மாவட்டத்தில் உங்கள் பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்படும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உங்களுக்கு சேர வேண்டிய நீர் முறையாகக் கிடைப்பதற்கு நிச்சயமாக, உறுதியாக கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது என்ன முயற்சியில் ஈடுபட்டாரோ அதே முயற்சியில் நானும் ஈடுபட்டு அந்த பிரச்சினைகளை நிச்சயமாக தீர்த்து வைப்போம் என்ற அந்த உறுதியை நம்முடைய அன்வர் பாலசிங்கம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வெளிநாடு சென்ற கணவர் காணாமல் போனதாக இங்கே சகோதரி கிரேஸ் அவர்கள் உருக்கத்தோடு, கலக்கத்தோடு குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், சி.எம். செல்லுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படிப் பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதே போல பல மாவட்டங்களில், வெளிநாடுகளுக்கு சென்று என்னுடைய பையன் வரவில்லை, கணவர் வரவில்லை என்று மேலும் சிலர் சொன்னார்கள். சொன்னவுடன் 100 நாட்கள் காத்திருக்கவில்லை. அன்றே நடவடிக்கை எடுத்தேன். அதேபோல இன்றைக்கு இரவே டெல்லியில் இருக்கும் நம்முடைய எம்.பி.க்களைத் தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லி எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோம். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம். தைரியமாக இருங்கள்.

கதர்த் துறை அமைச்சரைப் பற்றி பேசினார்கள். நான் கூட சட்டமன்றத்தில் பலமுறை அவரை தேடித் தேடிப் பார்ப்பேன். அவர் அமைச்சர். ஆனால் அமைச்சர் தானா என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்.

அவர்தான் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சராக இருக்கிறார். அவர் துறைக்குத்தான் எதுவும் செய்யவில்லை, தொகுதிக்காவது எதாவது செய்திருப்பாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

பழனிசாமி கேபினட்டில் 3, 4 பஃபூன்கள் இருக்கிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர். மாவட்டத்தில் பஃபூன் பாலாஜி என்று ஒருவர் இருக்கிறார். பலூன் பாலாஜி என்றும் சொல்லலாம். அதேபோல திண்டுக்கல் பக்கத்தில் ஒருவர் இருக்கிறார், சீனிவாசன். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது. அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் தானும் வரவேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்கிறார் உங்கள் ஊர் அமைச்சர். அவர் பெயர் வெளியில் வரவே மாட்டேன் என்கிறது.

மீசை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டால் போதாது. நம்முடைய பெரியகருப்பன் அவர்களும் மீசை வைத்து இருக்கிறார். அவர் அதற்கேற்ப சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அது வேறு.

சகோதரி சங்கீதா சொன்னது நிச்சயமாக கவனிக்கப்படும். கைத்தறிக்கு தி.மு.க. எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், ஏன் எதிர்க்கட்சியாக இல்லாத காலத்திலும் கூட 1954-ஆம் வருடத்தில் தேங்கியிருந்த கைத்தறித் துணிகளை, அண்ணாவும், பேராசிரியரும், தலைவரும், நாவலரும், தலையிலும் - தோளிலும் சுமந்து கொண்டு, “கைத்தறி துணி வாங்கலையோ, கைத்தறி துணி வாங்கலயோ’ என்று விற்ற வரலாறெல்லாம் உண்டு.

எனவே கைத்தறித்துணிக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் ஆட்சிதான் தி.மு.க. எனவே அவர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரங்கசாமி அவர்கள் சொன்னதுபோல உரம், விதை போன்ற விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் அரசு கடைகளில் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது. அங்கு போதிய அளவில் சேமிப்பு வைக்காத நிலையில் தனியாரிடம் சென்று வாங்க வேண்டியிருக்கிறது. அது கட்டுபடி ஆகவில்லை என்று மனுவில் அரங்கசாமி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இது செய்வதற்கு 100 நாள் தேவையில்லை. செய்வதற்கு மனது இருந்தால் போதும். நிச்சயமாக நாம் வந்ததற்குப் பிறகு அவை எல்லாம் களையப்படும்.

அதுமட்டுமின்றி நான் சொல்வதைத்தான் முதலமைச்சர் செய்கிறார் என்றும் பெருமையாக சொன்னார்.

அதற்குக் கூட முதலமைச்சர் பழனிசாமிக்குக் கோபம் வந்து விட்டது. அதாவது அவர் செய்ய நினைப்பதை நான் சொல்லி விடுவதாக முதலமைச்சர் பழனிசாமி சொல்லி இருக்கிறார். காலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை நான் சொல்லியா அவர் செய்தார். அதற்கு நானா பொறுப்பாக முடியும்? எனவே, இன்றைக்கு ஒரு கோமாளித்தனமான, ஊழல் நிறைந்த ஆட்சியை, ஊதாரித்தனமான ஆட்சியை, கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் நிறைந்த ஆட்சியை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் கால அவகாசம் இருக்கிறது. அதற்கு நீங்கள் எல்லாம் தயாராகுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் தன் மகளையும், மருமகளையும் பறிகொடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் இவ்வாறு தான் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒரு அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு பழனிசாமி ஆட்சியில் இருக்கும் நிலை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக காவல்துறையை முடுக்கிவிட்டு சந்தியாகுவின் மகள் மற்றும் மருமகள் கொலைக்கு நீதி வழங்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் தனது சகோதரியை இழந்து தவிக்கும் ஆல்பர்ட் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு ஏற்பட்ட இந்த அநியாயம், கொடுமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று அதையும் நீங்களே சொன்னீர்கள். உங்கள் உணர்வுக்கு நான் கட்டுப்படுகிறேன். கடமைப்பட்டிருக்கிறேன்.

தி.மு.க. ஆட்சியில் தான் மருத்துவத்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைக்கு ‘மினி கிளினிக்’ என்று ஒன்று ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கு மருத்துவர்கள் இல்லை, நர்சுகள் இல்லை, மருந்துகள் இல்லை. ஆட்சி 3 மாதத்தில் போகப்போகிற காரணத்தினால் கொள்ளையடிப்பதற்காக அவசரமாகத் தொடங்கினார்கள்.

அவ்வாறு சொல்லி அதற்காக 10 கோடி ரூபாய் அளவில் விளம்பரம் செய்து அவர்கள் திறந்து வைத்தார்கள். அதற்கெல்லாம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலகட்டங்களில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், அலட்சியம் காட்டாமல் பணிபுரியும் நிலையை நிச்சயம் தி.மு.க. ஏற்படுத்தும் என்ற அந்த நம்பிக்கையை நம்முடைய ஆல்பர்ட் அவர்களுக்கு இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

வேல்முருகன் அவர்கள் திருடர்கள் பிடிபட்டும் கூட்டுறவு சங்கங்களில் திருடுபோன நகைகள் எனக்கு திரும்பக் கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது நாட்டில் இருக்கும் திருடர் குலத்தலைவர் ஆட்சி ஒழியட்டும். நிச்சயமாக இதற்கு விடிவு காலம் கிடைக்கும் கவலைப்படாதீர்கள்.

இப்போது, உங்களது மனுக்கள் அடங்கிய இந்தப் பெட்டிக்குப் பூட்டு போட்டு, சீல் வைத்து, அதை நான் சென்னை அண்ணா அறிவாலயத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடுவேன்.

தேர்தல் முடிந்து உங்கள் ஆதரவோடு நாம் ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்த அடுத்த நாள் இந்த சீல் உடைக்கப்பட்டு, பெட்டி திறக்கப்படும். இதற்கென்று ஒரு தனித்துறை நிச்சயமாக அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்பட்ட துறையில் இருக்கும் அதிகாரிகள் வேறு எந்த வேலையும் பார்க்கக்கூடாது.

100 நாட்கள் இந்த வேலையை மட்டும் தான் பார்க்கவேண்டும். கலைஞருடைய மகனான இந்த ஸ்டாலின் சொன்னதைத் தான் செய்வான், செய்வதைத்தான் சொல்வான் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.”

பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் இவ்வாறு பேசினார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“தமிழகத்தின் தமிழினத்தின் பெருமைக்கு அடையாளமாகச் சொல்லக் கூடிய கீழடி சிவகங்கை மாவட்டத்தில் தான் உள்ளது. சங்ககாலப் பெருமை பேசுகிறோம் என்றால் அவை அனைத்தும் உண்மை என்பதற்கான ஆதாரம் தான் இந்த கீழடி. நம்முடைய தமிழர் நாகரிகமும் பண்பாடும் 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தையது என்பதற்கான ஆதாரம் உள்ள மண் இந்த கீழடி மண்.

அந்தப் பெருமை கூட தமிழினத்துக்கு கிடைத்துவிடக் கூடாது என்று தடுத்த தமிழின விரோத அரசு தான் மத்திய பா.ஜ.க. அரசு.

கீழடியை ஆய்வு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறையின் அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன் 2015-ஆம் ஆண்டு ஆய்வு நடத்தினார். அதற்கு அடுத்த ஆண்டும் ஆய்வு நடத்தினார். தமிழர்கள் எத்தகைய பெருமைக்குரிய இனமாக வாழ்ந்துள்ளார்கள், அனைவரும் நாகரிகத்தில் எவ்வளவு முன்னேறிய மக்களாக இருந்துள்ளார்கள் என்பதை அவர் கண்டுபிடித்தார். உடனே அமர்நாத் ராமகிருஷ்ணனை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள்.

அதன்பிறகு ஸ்ரீராமன் என்பவர் வந்தார். அவர் ஒப்புக்கு சில ஆய்வுகளைச் செய்துவிட்டு போனாரே தவிர அக்கறையோடு ஆய்வு செய்யவில்லை. அதன் பிறகு கீழடியையே மத்திய பா.ஜ.க. அரசு மறந்து விட்டது.

மறைக்கத் திட்டமிட்டது. இது மாதிரி வடமாநிலத்தில் ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தால் பா.ஜ.க. அரசு எத்தனை துள்ளு துள்ளும். ஆனால் தமிழ்நாடு என்பதால் புறக்கணித்தார்கள்.

2018-ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய தொல்லியல் துறையே ஆய்வு நடத்தவில்லை. போராட்டம், வழக்குகள் என மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு கூட பா.ஜ.க. அரசு இறங்கி வரவில்லை.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செய்வோம் என்று தமிழக அரசு சொல்லிப் பார்த்தது. அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. வேறுவழியில்லாமல் இப்போது தமிழக அரசு மட்டும் ஆய்வு நடத்தி வருகிறது.

மத்தியத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் தான் இந்த ஆய்வுக்கு இந்திய அங்கீகாரம், உலக மரியாதை கிடைக்கும். ஆனால் அதை பா.ஜ.க. அரசு செய்யவில்லை.

2015 - 2016 – 2017-ஆம் ஆண்டு காலத்தில் ஆய்வு செய்தார்களே அந்த அறிக்கையையாவது வெளியிட்டதா பா.ஜ.க. அரசு என்றால் அதுவும் இல்லை!

தமிழனின் பெருமை வெளியில் வரக் கூடாது - தமிழின் பெருமை உலகம் அறியக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்களுக்கு - தமிழர்களின் வாக்கு மட்டும் எதற்காக வேண்டும்? தமிழுக்கு பெருமை வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு தமிழனின் வாக்கு மட்டும் எதற்காக? என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்க விரும்புகிறேன்.

தமிழின் பெருமையை - தமிழர்களின் பெருமையை அழிக்க நினைப்பவர்களோடு தங்களது சுயநலத்துக்காக கூட்டுச் சேர்ந்துள்ளது அ.தி.மு.க. கொள்ளையில் மட்டும் குறியாக இருக்கும் அ.தி.மு.க.வை வைத்து - தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.

அதனால்தான் நேற்று முன்தினம் நான் பேசிய போது அரை அ.தி.மு.க. – அரை பா.ஜ.க. அரசு இது என்று சொன்னேன்.

பா.ஜ.க.வை எதிர்க்கும் வல்லமை- மத்திய அரசிடம் வாதிட்டு தமிழகத்தின் உரிமைகளை மீட்கும் துணிச்சல் அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. பழனிசாமிக்கு இல்லை. பன்னீர்செல்வத்துக்கு இல்லை. இருவரும் தங்கள் வீரத்தை அடுத்தவருக்கு எதிராகக் காட்டிக் கொள்வதில் நேரத்தை செலவிட்டார்களே தவிர, தமிழகத்தின் உரிமைக்காக அந்த வீரத்தை காட்டவில்லை.

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் பா.ஜ.க.வை இவர்கள் எதிர்க்கவில்லை. மாநிலம் கேட்கும் நிதியை தராத மத்திய அரசை இவர்கள் எதிர்க்கவில்லை. இயற்கை பேரிடர் கால நிதியைக் கூட தராத பிரதமரை இவர்கள் கேள்வி கேட்கவில்லை.

ஜி.எஸ்.டி. வரி பாக்கியை வசூலிக்கும் துணிச்சல் இல்லை. இந்தித் திணிப்பை தடுக்கவில்லை. இப்படி எதையும் செய்யத் துணிச்சல் இல்லாத உங்களுக்கு எதற்காக முதலமைச்சர் பதவி என்பது தான் என்னுடைய கேள்வி. தமிழகத்தின் எந்த உரிமையையும் மீட்டுத் தர துப்பு கெட்ட உங்களுக்கு கோட்டை எதற்கு என்பது தான் என்னுடைய கேள்வி. இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி.

இத்தகைய கோழையான பழனிசாமி, கடைசி நேரத்தில் பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறார். சட்டமன்றத்தில் பேசும் போது, உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் பேசி இருக்கிறார். இப்படிச் சொல்வதற்கு அவருக்கு கூச்சம் இல்லையா? வெட்கம் இல்லையா?

உழவர்களின் அச்சாணியை முறித்துவிட்டு, உழவர்களை எதற்காக புகழ்கிறீர்கள்? எலும்பு இல்லாத நாக்கு எந்தப் பக்கமும் வளையும் என்பதால் பேசுகிறீர்களா?

மூன்று வேளாண் சட்டங்கள் வந்தால், விவசாயி வாழ்க்கையே பேச்சு மூச்சு இல்லாமல் நின்று போகும். அதனால் தான் கடும்குளிரில் இரண்டு மாதங்களைக் கடந்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பழனிசாமி, விவசாயிகளைப் பற்றி பேசலாமா?

அவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள் என்று சொன்ன அரசியல் புரோக்கர் தான் இந்த பழனிசாமி. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க எதிர்த்து வாக்களித்திருந்தால் விவசாய சட்டம் தோற்று போயிருக்கும். ஆதரித்து வாக்களித்து தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல, இந்திய விவசாயிகளுக்கே வாயில் விஷத்தை ஊற்றிய விஷக்கிருமி தான் இந்த பழனிசாமி.

விவசாயி என்று போலி வேடம் போடும் அவர், தி.மு.க கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாது என்று சொல்லி இருக்கிறார். பதவிப்பிரமாணம் எடுத்த மேடையில் வைத்து 7,000 கோடி கடனை ரத்து செய்த ஆட்சி தான் தி.மு.க ஆட்சி. எனவே பழனிசாமி அவரது பொய்ப்புகார்களை வேறு எங்காவது போய் சொல்லட்டும்.

'நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத் தேர்தலில் சொன்னார் ஸ்டாலின். வெற்றி பெற்றார். ஆனால் வாக்குறுதியை மறந்துவிட்டார்' என்று சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார் பழனிசாமி.

முதலமைச்சருக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்று தெரியவில்லை. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்ததா? இல்லை! பிறகு எப்படி வாக்குறுதியை நிறைவேற்றினாரா ஸ்டாலின் என்று கேட்க முடியும்? இப்படி கேட்பவருக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்று தான் கேட்க முடியும்.

பழனிசாமியிடம் நான் கேட்கும் கேள்வி - 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தீர்களே? அந்த 2,000 மினி கிளினிக்குகளை தொடங்கிவிட்டீர்களா? அதற்கு எத்தனை டாக்டர்களை வேலைக்கு எடுத்தீர்கள்? எத்தனை நர்சுகளை வேலைக்கு எடுத்தீர்கள்? மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, இவை தற்காலிகமானவைதான் என்று சொன்னது ஏன்?

மருத்துவ முகாம் நடத்துவதை போல சும்மா ஒப்புக்கு ஒரு கட்டடத்தை பிடித்து பச்சை பெயிண்ட் அடித்துவிட்டால் அது மினி கிளினிக் ஆகிவிடுமா? இப்படி பழசுக்கு பெயிண்ட் அடிக்கும் ஆட்சி தான் அ.தி.மு.க ஆட்சி. புதிதாக எதையும் உருவாக்கவில்லை.

வாக்குறுதியை நிறைவேற்றுவது என்றால், பதவி ஏற்ற மேடையிலேயே கையெழுத்து போடுவதுதான் வாக்குறுதியை நிறைவேற்றுவது. பதவி முடியப் போவதற்கு முந்தைய மாதம் கையெழுத்து போடுவது அல்ல.

கூட்டுறவு கடனை ரத்து செய்வதாக சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை என்று மக்கள் கேட்பார்கள். மறியல் செய்வார்கள். என்பதால் இப்போது பழனிசாமி இதைச் செய்கிறாரே தவிர உண்மையாக மக்கள் மீதான அக்கறையில் இதனைச் செய்யவில்லை.

மக்களால் ஒதுப்பட்டு விட்டார் பழனிசாமி. சொந்தக் கட்சிக்காரர்களது மரியாதையைக் கூட இழந்துவிட்டார் பழனிசாமி. இந்த இழப்பை சரிக்கட்டுவதற்காக இது போன்ற நாடகங்களை நடத்துகிறார்.

நீட் தேர்வில் நாடகம்! ஏழு பேர் விடுதலையில் நாடகம்! விவசாயிகளிடம் நாடகம்! சிறுபான்மையினரிடம் நாடகம்!

இப்படி தொடர் நாடகங்களை மறைக்க கோடி கோடியாக அரசு பணத்தை செலவு செய்து விளம்பரம் கொடுத்து வருகிறார். கொள்ளையடித்த பணத்தில் விளம்பரம் செய்து கொள்ளட்டும். ஆனால் அரசு பணத்தை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? மக்கள் வரிப்பணத்தில் எதற்காக பழனிசாமிக்கு ஏன் இத்தனை விளம்பரங்கள்? இப்படி விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு என்ன சாதனைகளைச் செய்துவிட்டார்?

எதுவுமே செய்யாதது தான் அவரது சாதனை! எதுவும் செய்யத் தெரிந்தால் தானே செய்வார்?

ஒரு ஆட்சியாளருக்கு மக்களைப் பற்றிய கவலை இருக்க வேண்டும். பொது நோக்கு இருக்க வேண்டும். எதிர்காலக் கனவுகள் இருக்க வேண்டும்.

மக்களைப் பற்றிய கவலையும் அவருக்கு கிடையாது. சசிகலா காலை பிடித்து பதவி வாங்கியவர்.

தனது நாற்காலியைப் பற்றி கவலைப்படவே நேரம் போதாத காரணத்தால் பொதுமக்களுக்காக சிந்திக்க நேரம் இல்லை. எந்தத் தகுதியும் இல்லாதவர் என்பதால் எதிர்காலக் கனவுகள் இல்லை.

இத்தகைய மண்குதிரையை நம்பி, அ.தி.மு.க.வால் இனி பயணம் செய்ய முடியாது. இத்தகைய உதவாக்கரையை நம்பி அவர்களால் கட்சி நடத்த முடியாது. ஆட்சி நடத்தவும் முடியாது.

இந்த கழிசடை நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல். கழக ஆட்சி, மக்கள் ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி விரைவில் அமையும். அது உங்கள் ஆட்சியாக அமையும்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories