
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இ-மெயில் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் அனுப்பிய இ-மெயிலில் டெல்லியில் உள்ள முக்கிய 9 பள்ளிகளை குறிப்பிட்டு அந்த பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மெயிலில் "டெல்லி காலிஸ்தானாக மாறும்... பஞ்சாப் தான் காலிஸ்தான்... அஃப்சல் குரு நினைவில்..." என்றும், "பிப்ரவரி 13 ஆம் தேதி 1:11 மணிக்கு நாடாளுமன்றத்தில் குண்டு வெடிக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கும், 9 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் கார் வெடிகுண்டு டெல்லியில் நடைபெற்றது. இந்த சூழலில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காலிஸ்தான் இயக்கம் (Khalistan movement) என்பது சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட இயக்கம். இதனால் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான ஒன்றிய அரசு, காலிஸ்தான் தேசியவாதிகளை புளூஸ்டார் நடவடிக்கையால் கட்டுப்படுத்தியது.
அஃப்சல் குரு (Afzal Guru) என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஆவார். இவர் 2013-ம் ஆண்டு பிப்.9-ம் தேதி தூக்கிலிடப்பட்டார். இன்றும் பிப்.9-ம் தேதி என்பதால் இந்த மிரட்டலை விடுத்தது அவரது ஆதரவாளராக இருக்குமோ என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






