
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
20 ஆண்டுகளாக வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் தவித்து வரும் பீகார் மக்களை மீட்க குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் மக்கள் ஆதரவு கிடைக்காததால், வாக்குத் திருட்டு மூலம் பா.ஜ.க வெற்றி பெற முயற்சி செய்கிறது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பீகார் மாநிலம், அவுரங்காபாத் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ” 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தாலும் பீகார் மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. இங்கு உரிய வேலைகள் கிடைக்காததால்,
இம்மாநில மக்கள், பல மாநிலங்களில் தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வருகிறார்கள். பீகாரில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்பது மோடிக்கும் அமித்ஷாவுக்கு நன்றாக தெரியும்.
இதனால், வாக்குத் திருட்டு மூலம் வென்றுவிடலாம் என நினைக்கிறார்கள். மேலும் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்குத் திருட்டு நடத்தம் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. என்ன செய்தாலும் பா.ஜ.கவால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது” என தெரிவித்துள்ளார்.








