பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜகவின் வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரையை கடந்த 17 ஆம் தேதி தொடங்கினார். 11-வது நாளாக நேற்று நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பீகார் சென்று கலந்து கொண்டார். சென்னையில் இருந்து விமானத்தில் தர்பங்கா நகர் சென்ற முதலமைச்சர், முசாபூர் மாவட்டத்தில் யாத்திரையில் பங்கேற்றார். அவரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து ஒரே வாகனத்தில் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வியுடன் யாத்திரையை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழி நெடுகிலும் பல்லாயிரம்க்கணக்கான மக்கள் திரண்டு நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த பேரணியில் பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு நடைபெற்ற பேரணிப் பொதுக்கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியது வருமாறு:-
பீகாரில் பொய் புரட்டுகள் நிறைந்த பாஜக கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். பீகாரில் முற்றிலும் ஊழல் நிறைந்த ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். நம் கிராமங்களை வலுப்படுத்தவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன். அவருக்கு நன்றி.
இவ்வாறு தேஸ்வி யாதவ் பேசினார்.