உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் இருந்த ஹரிஹர் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொல்லியல் துறையினர் கள ஆய்வுக்கு சென்றபோது அங்கு வன்முறை வெடித்தது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற இன்று டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாநில எல்லையான காசிப்பூரில் தடுப்புகளை ஏற்படுத்திய உத்தரப்பிரதேச காவல்துறையினர், காரில் வந்த ராகுல்காந்தியையும், பிரியங்கா காந்தியையும் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் ராகுல்காந்தியும், பிரியங்காகாந்தியும் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்தனர். அப்போது, உத்தரப்பிரதேச காவல்துறையினருடன் காங்கிரஸ் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட சொல்ல கூடாதா என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னரும் ராகுல்காந்தியையும், பிரியங்கா காந்தியையும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும், இருவரையும் டெல்லிக்கே திருப்பி அனுப்பினர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் கட்சி உட்பட இந்தியா கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.