.jpg?auto=format%2Ccompress)
குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு சட்ட ஒழுங்கு பிரச்னை மட்டுமின்றி, சிறுபான்மையினர், தலித் சமூகத்தினருக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்கள் தாக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில் தற்போது தலித் மாணவர் இயக்கத் தலைவரை பாஜக MLA மகன் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
குஜராத்தின் ஜூனாகாத் பகுதியில் கடந்த மே 29-ம் தேதி இரவு நேரத்தில் NSUI என்ற மாணவர் இயக்கத் தலைவர் சஞ்சய் சோலங்கி (26) தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் காரில் அந்த பகுதிக்கு வந்த பாஜக MLA கீதாபா ஜடேஜாவின் மகன் கணேஷ் ஜடேஜா வேகமாக சென்றுள்ளார்.

இதனால் மெதுவாக செல்லும்படி சஞ்சய் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை தாக்க எண்ணியுள்ளனர். அதன்படி மறுநாள் (மே 31) அதிகாலை நேரத்தில் சஞ்சய் தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றதை நோட்டமிட்ட அந்த கும்பல், அவரை பின் தொடர்ந்து தங்கள் காரால் இடித்துள்ளனர். இதில் கீழே விழுந்த அவரை, ராஜ்கோட் பகுதியில் உள்ள கணேஷிற்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கே வைத்து சஞ்சயை பாஜக எம்.எல்.ஏ. மகன் கணேஷ் உள்பட பலரும் தாக்கியுள்ளனர். மேலும் அவரை மாணவர் தலைவர் பதவியில் இருந்து விளக்குமாறும் மிரட்டியுள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சஞ்சய் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சஞ்சய், போலீசில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நீண்ட நாட்களாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கைது செய்யப்பட்ட கணேஷ் உள்ளிட்ட கும்பல், சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நேற்று (ஜூலை 6) பாஜக எம்.எல்.ஏ. மகன் கணேஷ் ஜடேஜா மற்றும் அவருடன் உள்ளவர்களை போலீசார் வாகனத்தில் சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது வாகனத்தின் உள்ளே இருந்த கணேஷ், சிரித்துக்கொண்டே வெற்றியின் குறியான 'V' என்ற குறியீட்டை காண்பித்தவாறே வாகனத்தில் இருந்து இறங்கினார்.
மேலும் அவரும் அவருடன் வந்தவர்களும் கைக்காட்டி, சிரித்துக்கொண்டே சிறைக்குள் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைதான பாஜக எம்.எல்.ஏ மகன் இவ்வாறு எந்தவொரு தவறுமே செய்யாதது போல் நடந்துகொள்வதற்கு கண்டனங்கள் குவித்து வருகிறது.








