இந்தியா

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு - மோடி ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்திய அமெரிக்கா: பின்னணி?

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு - மோடி ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்திய அமெரிக்கா: பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர், தலித், பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. மேலும் சர்வாதிகாரப்போக்குடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஏவி பாசிச நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

பாஜக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மோடி ஆட்சியில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு உலக நாடுகள் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது, இந்நிலையில், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அமெரிக்கா ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையை வௌியிட்டு வருகிறது. அதன்படி “2023 ஆண்டின் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்த நாட்டின் அறிக்கைகளில் “இந்தியா” என்ற தலைப்பில் அமெரிக்க வௌியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று அறிக்கையை வௌியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் மனித உரிமைகள் அளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு - மோடி ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்திய அமெரிக்கா: பின்னணி?

குறிப்பாக அந்த அறிக்கையில், “மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ், குக்கி சமூகத்தினரிடையே இனமோதல்கள் வெடித்தன. இதனை தொடர்ந்து அங்கு மனித உரிமை மீறல்கள் அரங்கேறின. 2016-22க்கு இடையே சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டத்துக்கு புறம்பான 813 என்கவுன்டர் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன”, “நாடு கடந்த அடக்குமுறை” என்ற தலைப்பில் பத்திரிகையாளர்கள், புலம்பெயர்ந்தோர், சிவில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீது இந்தியா அடக்குமுறையை கையாள்கிறது.

இதேபோல் குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப் படம் வௌியானதை தொடர்ந்து பிபிசி அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை, தன்னிச்சையான கைது அல்லது காவலில் வைத்தல், வாக்குமூலங்களை சித்ரவதை செய்தல், மீண்டும், மீண்டும் இணைய முடக்கம், தடை செய்யப்பட்ட தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

மேலும் மோடியின் குடும்ப பெயர் குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின் ராகுல் காந்தி மீதான தடை நீக்கம் பற்றி அமெரிக்க அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய அறிக்கை நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories