நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பிப்ரவரி 13ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. இந்த அமர்வு ஏப்ரல் 6ம் தேதி இன்று வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்கட்சிகள் அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதன் மீது ஒன்றிய அரசு பதில் எதுவும் சொல்லாமல் தினந்தோறும் மக்களவையை ஒத்திவைத்து வந்தது. இதற்கிடையில் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் மக்களவையில் எதிரொலித்தது. இதனால் ஒன்றிய அரசு எதிர்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களைவை தினந்தோறும் ஒத்திவைத்து வந்தது.
இன்று வரை கடந்த 17 நாட்கள் மக்களவை கூட்டத் தொடர் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு ஒத்திவைத்து வந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மக்களவை தொடங்கியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அதோடு இன்று மக்களவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து "மோடி சர்க்கார் Down Down" என்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதேபோல் மாநிலங்களவையும் இன்றோடு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது.