தனது நாக்கை வெட்டியதால் பழி வாங்க எண்ணிய இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 38 வயதுடைய நபரை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தரஹள்ளி என்ற பகுதியை அடுத்துள்ள ரவுகோத்லு என்ற பகுதியை சேர்ந்தவர் சந்துரு. 38 வயதான இவர் கடந்த 1 வருடம் முன்பு ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவர் மணி என்பவரிடம் வாடகைக்கு ஆட்டோ ரிக்ஷாவை வாங்கி சென்றுள்ளார். அப்போது சந்துரு பேசிய படி பணத்தை மணியிடம் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சந்துரு, அவரது நண்பர்களுடன் சேர்ந்து மணியை அடித்து உதைத்ததோடு மட்டுமில்லாமல், அவரது நாக்கையும் வெட்டியுள்ளார். இதையடுத்து சந்துரு மணியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு பலமுறை ஜாமீன் கேட்டும், சந்துருவின் மன நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ளது.
இந்த நிலையில், தீவிர முயற்சிக்கு பிறகு சந்துருவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீன் கிடைத்துள்ளது. தற்போது வரை சந்துருவுக்கு திருமணமும் ஆகவில்லை, அவர் வேலைக்கும் செல்வதில்லை. எனவே வீட்டில் மட்டும் இருந்து வந்துள்ளார். இவர் ஜாமீனில் வெளியே வந்ததை அறிந்த மணி, அவரது நண்பர்களின் உதவியோடு சந்துருவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் மணியுடன் சேர்ந்து சுமார் 4-5 பேர் கொண்ட கும்பல், சந்துருவின் வீட்டின் கதவை உடைத்து, அவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். கட்டை மற்றும் கை, கால்களை கொண்டு தாக்கிய இவர்கள் சந்துருவின் தலையை சுவற்றில் அடித்தும் கடுமையாக தாக்கினர். மேலும் அருகிலிருந்த கல்லை கொண்டும் அவரது தலையில் போட்டு கொலை செய்தனர்.
தனது மகன் இறந்துகிடப்பதை கண்ட சந்துருவின் தந்தை இது குறித்து மணி மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட மணி, தன்னை இந்த நிலைக்கு தள்ளிய சந்துருவை பழிக்கு பழி வாங்க தான் கொலை செய்ததாவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர்கள் மீது திட்டமிட்ட கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.