உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரத்தைச் சேர்ந்தவர் சுதேஷ்பால் சிங். இவரது மகள் பூஜா தோமர். இவரைக் கடந்த 2014ம் ஆண்டு ராணவ மேஜர் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்த திருமணத்திற்காக 60 சவரனுக்கு தங்க நகைகள், கார், 3 ஏக்கர் நிலம் ஆகியவற்றை வரதட்சணையாக சுதேஷ்பால் சிங் கொடுத்துள்ளார். இருப்பினும் இந்த வரதட்சணை பத்தாது என ராணவ மேஜர் மனைவியை அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவசரமாக ரூ.10 லட்சம் கேட்டு மனைவியை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இதில் அவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். அப்போது ராணுவ மேஜர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் விரலை வெட்டி எடுத்துள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுதேஷ்பால் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அவர் ராணுவ மேஜர் என்பதால் போலிஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதையடுத்து சுதேஷ்பால் சிங் இந்த சம்பவம் குறித்து குடியரசுத் தலைவருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார்.