2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, இரவு 8 மணியை இந்தியர்கள் யாரும் வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றுதான் கள்ள நோட்டை ஒழிக்கப் போவதாகக் கூறிய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கள்ள நோட்டு புழக்கம் மட்டும் நாட்டில் குறைந்தபாடில்லை. 2020 -21ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர ஆண்டறிக்கையில் கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
தற்போது மீண்டும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ.2000 நோட்டு புழக்கமும் குறைந்துவிட்தாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 -21ம் ஆண்டு ரூ.500 கள்ள நோட்டுகள் 102% அதிகரித்துள்ளதாகவும், ரூ.2000 நோட்டுகள் ரூ.54%, ரூ.200 நோட்டுகள் 11.7% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுதான் ஒன்றிய அரசு செய்த ஒரே சாதனை என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தியின் ட்விட்டரில், "நாட்டின் பொருளாதாரத்தை மூழ்கடித்ததுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிர்ஷ்டவசமான சாதனை" என தெரிவித்துள்ளார்.