இந்தியா

”மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் பிரச்சனைகள் நீங்கும்”.. மூட நம்பிக்கையை பரப்பும் பாஜக அமைச்சர்!

மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் தடைகள் எதுவும் வராது என உத்தர பிரதேச பா.ஜ.க அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் பிரச்சனைகள் நீங்கும்”.. மூட நம்பிக்கையை பரப்பும் பாஜக அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாட்டுக் கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதாகத் தொடர்ச்சியாக பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இதுவரை அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது கூட மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் கொரோனா வராது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பேசி வந்தனர்.

குறிப்பாக பா.ஜ.க எம்.பியான பிரக்யா சிங் தாக்கூர், "பசுவின் சாணம், கோமியம் கலந்த பஞ்சகாவ்யா மருந்தை உண்டதன் மூலம் தன்னுடைய மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டதாகக் கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் நான் கோமியம் குடிப்பதால் கொரோனா வரவில்லை" என பேசியிருந்தார்.

இப்படி பேசிய பா.ஜ.கவை சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதித்தனர். பின்னர் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனர். இருப்பினும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் மாட்டு கோமிய பிரச்சாரத்தைக் கைவிடாமல் பேசி வருகின்றனர்.

தற்போது கூட உத்தர பிரதேச கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் தடைகள் எதுவும் வராது என மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையைப் பரப்பும் வகையில் பேசியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் தரம்பால் சிங், "மாட்டுக் கோமியத்தை வீடுகளில் தெளிப்பதன் மூலம் வாஸ்து பிரச்சனைகள் நீங்கும். பசுவின் கோமியத்தில் கங்கா தேவி வசிக்கிறாள். மாட்டு சாணத்தில் லட்சுமி வசிக்கிறாள்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த மூட நம்பிக்கை பேச்சுக்குப் பலர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories