தென்மேற்கு டெல்லி பகுதியில் இளம்பெண் ஒருவரை வாலிபர் கத்தியால் குத்தி விரட்டிச் செல்வதாக சாகர்பூர் காவல் நிலைய போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அங்கு சென்றபோது இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு போலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் உயிரிழந்த பெண் ஆரத்தி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த பெண் கையில் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டும், மற்றொரு சிறுவனை அழைத்தும் செல்கிறார். இவர்கள் பின்னால் ஓடிவரும் வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதையடுத்து அந்த வாலிபர் யார் என்பது குறித்து போலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர். நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.