தெலங்கானா மாநிலம், போய்கூடா பகுதியில் பழைய பொருட்களைச் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ளது. இங்கு இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனே அப்பகுதி மக்கள் போலிஸாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு விரைந்து வந்த 8 தீயணைப்பு வாகனங்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் உடல் கருகிய நிலையில், 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் தீ விபத்து ஏற்பட்ட குடோனின் கட்டத்தின் முதல் தளத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக தங்கியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட உடன் அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியே வருவதற்கு ஒருவழி மட்டும் இருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குடோனில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உயிரிழந்தவர்கள் உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.