கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷநவாஸ் (32). மருத்துவரான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஷாநவாஸின் செல்போனுக்கு முன்பின் தெரியாதவரிடம் இருந்து வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வந்ததால், முதலில் ஷாநவாஸ் பதிலளிக்கவில்லை. ஆனால், தொடர்ந்து அதே எண்ணில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.
அதை தொடர்ந்து அந்த எண்ணிலிருந்து மீண்டும் தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண் மருத்துவரிடம் சிகிச்சை தொடர்பாக சந்தேகம் கேட்பதுபோல ஆபாசமாகப் பேசியுள்ளார்.
தொடர்ந்து ஷாநவாஸின் செல்போனுக்கு அதிக அளவில் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். பின்னர் அவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக போலிஸில் புகார் கொடுக்க உள்ளதாகவும் புகார் கொடுக்காமல் இருக்க ரூ.3 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
தன்னை மிரட்டிய மர்ம நபரிடம் பணம் கொடுக்க ஷாநவாஸ் மறுக்கவே, துபாயில் இருந்து ஒருவர் அவரை போனில் அழைத்து மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷாநவாஸ் இதுபற்றி போலிஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலிஸார் விசாரணை நடத்தினர். பின்னர் பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டு பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வரவழைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஷாநவாஸை மிரட்டிய 2 பேர் திருச்சூர் மன்னூத்தி பகுதியைச் சேர்ந்த நவுபியா (33) மற்றும் அவரது தோழி நிஷா (29) என தெரியவந்துள்ளது. அவர்கள் 2 பேரையும் போலிஸார் கைது செய்து துபாயிலிருந்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.