டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கஜ், ஜதின். நண்பர்களான இவர்கள் இருவரும் தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 20ஆம் தேதி நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பிறகு, இருவரும் வீட்டின் அருகே வந்தபோது அங்கிருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது. பிறகு இவர்களிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாயை அந்த கும்பல் பறிக்க முயன்றது. இதனால், இருவரும் அந்த கும்பலை எதிர்த்துச் சண்டை போட்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் இருவரையும் கொடூரமாகத் தாக்கியது. பிறகு ஜதின் தலை மீது பெரிய கல்லை தூக்கிப்போட்டு தாக்கியுள்ளனர். மேலும் பங்கஜை அடித்து சாலையிலிருந்த கால்வாயில் வீசிவிட்டு அந்தக் கும்பல் சென்றுவிட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜதின் உயிரிழந்தார். மற்றொருவர் தீவிரமாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரம்சன் அலி என்பவரை கைது செய்தனர். மற்ற நபர்களை போலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.