இந்தியா

“ரயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு தரவேண்டும்” : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணிகளுக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ரயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு தரவேண்டும்” : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டால் சேவைக் குறைபாட்டுக்கு பயணிகளுக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு ஒரு குடும்பம் ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருந்தது. ஆனால், 4 மணி நேரம் ரயில் தாமதமாக வந்த காரணத்தால் அவர்கள் அதிக வாடகை கொடுத்து காரில் செல்லும் சூழல் ஏற்பட்டது.

ரயில் தாமதம் காரணமாக அங்கிருந்து அவர்கள் ஏற வேண்டிய விமானத்தையும் தவறவிட்டனர். ஸ்ரீநகர் தால் ஏரியில் படகு சவாரி செய்வதற்கான முன்பதிவும் ரத்தானது.

இதையடுத்து, ரயில்வே துறையின் தேவையற்ற தாமதம், சேவைக் குறைபாட்டுக்கு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அக்குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அந்த குடும்பத்துக்கு ரூ.30,000 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வடமேற்கு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை சார்பில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, “ரயில் தாமதமாகப் புறப்பட்டதற்கு சேவைக் குறைபாடு காரணம் என்று கூற முடியாது. ரயில்வே விதிகள் 114, 115ன்படி ரயில்கள் தாமதத்துக்கு இழப்பீடு வழங்க ரயில்வே பொறுப்பாகாது. ரயில் தாமதமாக வருவதற்கும், புறப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கும்” என்று ரயில்வே துறை சார்பில் ஆஜரான மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீரிப்பளித்த உச்சநீதிமன்றம், “பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும். ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதான ஆதாரங்களையும் ரயில்வேதரப்பில் தெரிவிக்கவில்லை.

ரயில் தாமதமாக வந்தமைக்கும், புறப்பட்டதற்கும் ரயில்வே நிர்வாகம் சரியான காரணத்தைக் கூறுவது அவசியம். குறைந்தபட்சம் ரயில் தாமதமாக வந்ததற்கு விளக்கமளிக்க வேண்டும், ஆனால், அதில் ரயில்வே தோல்வி அடைந்துவிட்டது.

ஒவ்வொரு பயணிக்கும் நேரம் விலைமதிப்பில்லாதது. அடுத்தடுத்த பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். ரயில் தாமதத்தை நியாயப்படுத்தாத நிலையில், ரயில் தாமதமாக வந்தமைக்கு பயணிக்கு இழப்பீடு தருவதற்கு ரயில்வே கடமைப்பட்டுள்ளது” எனக் கூறி ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories