கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாகப் பெங்களூருவில் மட்டும் 20 ஆயிரத்திற்கு மேல் கொரோனா எண்ணிக்கை உறுதியாகிவருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் ஒதுக்குவதில் ஊழல் நடந்துள்ளதாக ஆளும் பா.ஜ.க அரசின் எம்.பி தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா இன்று மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, கொரோனா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசு சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற கள்ளச்சந்தையில் படுக்கைகள் விற்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கை வசதி கிடைக்க ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுகிறது. இதில் தொடர்புடைய மூன்று மாநகராட்சி ஊழியர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்குப் படுக்கை இல்லை என்று கூறிவிட்டு, பணம் கொடுக்கும் சாதாரண நோயாளிகளுக்குப் படுக்கைகள் ஒதுக்குகிறார்கள். ஆக்சிஜன் தேவைப்படுவோர் செத்து மடிகிறார்கள். இது கொலையாகும்." எனத் தெரிவித்துள்ளார்.