தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று கூட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் சென்னையில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருவதால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள்தோறும 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் செங்கல்பட்டு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கொரோனா நோயாளிகள் உயிரிழப்புக்குக் காரணம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என்றும் அபாய கட்டத்தில் அவர்கள் சிகிச்சைக்கு வந்ததால் உயிரிழந்ததாக விளக்கமளித்துள்ளார். மேலும் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது என்றும் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.