பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தால் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டு U.P.S.C தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 50 பேர் நான் முதல்வன் மாணவர்கள். இப்படி நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி வருகிறது.
இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மண்டலங்களில் வங்கி தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளுக்கு (SSC, IBPS, RRB) பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் 300 மாணவர்களுக்கும், மதுரை, கோவை மண்டலத்தில் தலா 350 மாணவர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.