கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் ஜர்கிஹோளி. இவர் மீதுதான் தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது.
சமூக ஆர்வலரான தினேஷ் கல்லஹள்ளி என்பவர் நேற்று (மார்ச் 2) பெங்களூரு நகர காவல் ஆணையரை அணுகி பாஜக அமைச்சரான ரமேஷ் ஜர்கிஹோளி தொடர்புடைய பாலியல் அத்துமீறல் மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான தினேஷின் புகாரில், “ கர்நாடகாவின் KLPTCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கேட்டு 25 வயதுடைய பெண் ஒருவர் ரமேஷ் ஜர்கிஹோளியை அணுகியுள்ளார். அதற்கு பணி வாய்ப்பு தருகிறேன் என வாய்மொழி வார்த்தையாக கூறிவிட்டு அப்பெண்ணை ரமேஷ் துன்புறுத்தி, பாலியல் ரீதியில் தொந்தரவும் செய்துள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் அப்பெண் தன்னுடைய செல்ஃபோனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோக்களே சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அறிந்த ரமேஷ் ஜர்கிஹோளி பெண்ணின் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தினேஷ் கூறியுள்ளார்.
மேலும், பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி காவல் நிலையத்தை அணுகுமாறு பெங்களூரு கமிஷ்னர் கூறியதாகவும், இது முக்கியமான வழக்கு என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பு உள் விசாரணை நடத்தப்படும் என கப்பன் பார்க் போலிஸார் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சமூக ஆர்வலர் தினேஷ் பேட்டி அளித்துள்ளார்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் ரமேஷ் ஜர்கிஹோளியின் வீடியோ வைரலானதை அடுத்து பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் ரமேஷ் ஜர்கிஹோளியை பதவி நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.