
கொரோனா வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத்தில் இதுவரை கொரோனாவால் 915 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவை அம்மாநில அரசு கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், குஜராத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையையும் குறைத்துவிட்டதாக அம்மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது சோதனை முறைக் குறித்து எதிர்தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம் நீதிமன்றத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

குஜராத் அரசு தரப்பில் ஆஜரான ஜெனரல் கமல் திரிவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் அன்ஷின் தேசாய் ஆகியோருக்கு இடையே வாதங்கள் நடந்தன. அந்த விவாதத்தின் போது குஜராத் அரசு கொரோனா பரிசோதனையை செய்வதில் அலட்சியம் காட்டுவதாக மூத்த வழக்கறிஞர் தேசாய் குற்றம் சாட்டினர்.
மேலும் கோரோனா பதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். அதற்கு நீதிமன்றம் தலையீட்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும் என்று கோரியபோது, வழக்கறிஞர் திரிவேதி ஆட்சேபனை தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் திரிவேதி, மேலும் சோதனை செய்தால், அகமதாபாத்தில் சோதனை செய்யப்பட்ட 70% பேர் நேர்மறையாகக் காணப்படுவார்கள் என்று கூறினார். நோய் தொற்று எண்ணிக்கை அதிகமானால் மக்களிடையே பதற்றம் வரும். அதனால் பரிசோதனை என்ணிக்கையை குறைத்து இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே வென்ட்டிலேட்டர் விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் குஜராத் அரசின் இந்த வாதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க அரசை பலரும் விமர்த்துவருகின்றனர்.








