தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் பிரணய் குமார் பிரபல தொழில் அதிபரின் மகள் அம்ருதாவை காதலித்துள்ளார். சாதியை காரணம் காட்டி காதலை ஏற்காததை அடுத்து பிரணய் குமாரும் அம்ருதாவும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
பின்னர், அம்ருதா கர்ப்பமானதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பிரணவ் அழைத்துச் சென்றார். மகளின் திருமணத்தைப் பெறுத்துக்கொள்ளமுடியாத அம்ருதாவின் தந்தை, கூலி படையை ஏவி விட்டு பிரணய் குமாரைக் கொலை செய்தார்.
இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி-யில் பதிவாகி வெளியான அந்த காட்சிகள் இந்தியாவையே உலுக்கியது. காதல் கணவனை கண் முன்னே பறிக்கொடுத்த அம்ருதாவிற்கு ஆதரவாக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து கூலி படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் உள்ளிட்டோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரணவ் குமார் கொலை செய்யப்பட்டு 4 மாதங்கள் கழித்து அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அம்ருதாவின் தந்தை ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அங்கு தனியாக இருந்த அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.