
விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகலில் கொலை, கொள்ளை என தொடர்ந்து அடுக்கடுக்காக பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
தவெக-வினரும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலையில், தவெக தலைமை அதனை கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறது. அதோடு தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சம் உள்ளிட்டவற்றை ஒழிப்பேன் என்று சொல்லிய விஜய் கட்சியில் பலரும் லஞ்சம் பெரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதுமட்டுமின்றி தவெக பொறுப்பேற்றது முதல் லஞ்சம் இருக்காது யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை என்றும் தூய்மையான ஆட்சி நடத்துவதாகவும் அக்கட்சியின் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

ஆனால் தவெகவினர் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அவ்வப்போது தெரிய வருகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது சேலத்தில் பேருந்து நிலையத்தில் அரங்கேறியுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையில் ஏழை பெண் தொழிலாளர்கள் சிறிய அளவிலான பூக்கடைகள் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் அவர்களிடம் இருந்து தவெக நிர்வாகி ஒருவர் தினமும் மாமூல் வசூலித்து வருகிறார்.

அதாவது 45-வது கோட்ட துணை செயலாளர் முரளி என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வாருகிறார். 8 மணி நேரத்திற்கு ரூ.150 என்ற விதத்தில், நாள் ஒன்றுக்கு ரூ.450 மாமூல் தர வேண்டும் என்று கூறி வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்த புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காமலும் எந்தவித அனுமதியும் இல்லாமல் இதுபோன்ற நடைபாதையில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் மாமூலாக பணம் வசூல் செய்யும் இவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






