
2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில், தொகுதிகளின் எண்ணிக்கையை 25 ஆண்டுகளுக்கு மாற்றாமல் நிலைநிறுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் நடப்பு ஆண்டுடன் காலாவதியாகிறது.
இதனால், புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஒன்றிய அரசு உள்ளது.இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட புதிய பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்த்ததால் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது புதிய திருத்தங்களுடன் 133-வது அரசியல் சாசனத் திருத்த மசோதாவாக இது கொண்டு வரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசாரப்படியே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50% வரை அதிகரிக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை பணிகள் மட்டும் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசியல் சாசனத்தில் 7 புதிய திருத்தங்களுடன் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
பட்டியல் பிரிவினருக்கான (SC) நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 84-லிருந்து 136 ஆகவும், மலைவாழ் பழங்குடியின மக்களுக்கான (ST) தொகுதிகள் 47-லிருந்து 70 ஆகவும் உயர்த்தப்பட உள்ளன.
பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, தனியாக ஒரு 'தொகுதி மறுவரையறை ஆணையம்' அமைக்கப்படும். இந்த ஆணையம் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்களுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் வகையில் மசோதா தயாராகி வருகிறது.






