
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103–வது பிறந்தநாளையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட கழக மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடி தங்களது மரியாதையை செலுத்தினார்கள்.
பின்னர், சென்னை, அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதற்கடுத்ததாக கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முரசொலி வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் உள்ள அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார் தி.மு.க தலைவர், மு.க.ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து கழக்த்தின் தலைமையிடமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ‘வாழ்க வாழ்க வாழ்கவே.. கலைஞர் புகழ் வாழ்கவே’ என கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினார்கள். அதன்பின்பு, அங்கிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்புகளை வழங்கினார் கழகத் தலைவர் அவர்கள்.

சென்னை, சி.ஐ.டி காலனியில் உள்ள இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த, கலைஞர் திருவுருவப்படத்திற்கும், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த, கலைஞர் திருவுருவப்படத்திற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர், திமு கழகத்தின் இளைஞரணித் தலைமையிடனான தேனாம்பேட்டை அன்பகத்தில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த 75 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியினை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து அன்பகத்தில் புத்தாக்கம் செய்யப்பட்ட கழக இளைஞரணி அலுவலகத்தை திறந்து வைத்து, அங்குள்ள வருகை புத்தகத்தில் கையெழுத்திட்டார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.
இது போன்று காலை முதலே தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை ’திராவிட இயக்கத்தின் புத்தெழுச்சி நாளாக’ தமிழ்நாடு முழுவதும் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.






