தி.மு.க

“ஊழல் முறைகேட்டில் உலக சாதனை படைப்பார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி”- தி.மு.க எம்.எல்.ஏ சாடல்!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ள பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள்” என நா.கார்த்திக் எம்.எல்.ஏ., அறிக்கை விடுத்துள்ளார்.

“ஊழல் முறைகேட்டில் உலக சாதனை படைப்பார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி”- தி.மு.க எம்.எல்.ஏ சாடல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"தமிழக மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போலி முகத்திரையைக் கிழித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

“உள்ளாட்சித் துறை அமைச்சரா அல்லது ஊழலாட்சித் துறை அமைச்சரா என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கேட்கக்கூடிய அளவில் ஊழலில் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும்; மிக விரைவில் ஊழல் முறைகேட்டில் உலக அளவில் கின்னஸ் சாதனை படைக்க இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, பொது வாழ்வில் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் தூய்மையானவராக திகழும், அல்லும் பகலும், தமிழக மக்களின் தேவையறிந்து , அவர்களுக்காக பாடுபடும் எங்கள் கழகத் தலைவர் அன்புத் தளபதி பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.

ஊழலின் ஊற்றுக் கண்ணான, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிகவும் கேவலமான முறையில், பிதற்றல்களுடன், அரசியலுக்கு உண்டான அடிப்படை நாகரிகம் கூட தெரியாமல், அநாகரீகமாக ஒரு அறிக்கை வெளியிட்டு “உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகாது” என்ற பழமொழிக்கேற்ப தான் ஒரு 'ஊர்க்குருவிதான்' என்று நிரூபித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைப்பையே தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் மட்டும் உரித்தான துறையாக மாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, எங்கள் கழகத் தலைவரைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை. நேற்று அடித்த காற்றில் இன்று கோபுரத்தின் மீது சென்ற குப்பை ஒருபோதும் கோபுரக் கலசமாக மாற முடியாது!

மக்களைப் பற்றி சிந்திக்காமல் , மக்களைக் காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களைச் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த கேடுகெட்ட, தமிழக உரிமைகளை பறி கொடுத்த ஆட்சியைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை கூடத் தெரியாமல், “பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாகி விடும்” என்று எண்ணிக் கொள்வதைப் போல, “முதல் அமைச்சர் அண்ணன் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பேசுவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.

பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. “பொய்யிலே பிறந்து பொய்களிலேயே வாழ்ந்து வரும்” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதை தனது பெரிய சாதனையாக, தான் ஊழல் செய்து சம்பாதித்த சொந்தப் பணத்தில் கொடுத்தது போல பறைசாற்றிக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். அப்படி என்றால் தினம் தினம் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது ஏன்? நோய்த் தொற்றின் தலைநகராகச் சென்னை மாறிக்கொண்டிருப்பது ஏன்?

“ஊழல் முறைகேட்டில் உலக சாதனை படைப்பார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி”- தி.மு.க எம்.எல்.ஏ சாடல்!

கழகத் தலைவர் அவர்கள் அறிவித்த “ஒன்றிணைவோம் வா” முன்னெடுப்பின் கீழ் 18 லட்சம் உதவி எண் கோரிக்கைகள், 76 லட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 லட்சம் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி, 28 லட்சம் சமைத்த உணவுப் பொட்டலங்கள், 7 லட்சம் அரசிடம் சமர்ப்பித்த கோரிக்கைகள் என்று ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை தி.மு.க. கழக நிர்வாகிகள் துணையுடன் தனியொரு மனிதனாக செய்துள்ளார்.

ஆனால் தமிழக அரசும், அ.தி.மு.க.,வினரும் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை பேருக்கு நேரடியாக நிவாரண உதவிகள் வழங்கினர். நிவாரண களத்திற்கே வராமல் இருந்தது யார்? இதில் வீறுகொண்ட வேங்கை யார்? பொய்யையும், புரட்டையும் பரப்புபவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

நியாய விலைக் கடையில் விற்கப்படும், 19 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு, தரமற்றதாக இருப்பதால், மக்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இத்தனை நாட்கள் ஆகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இதுகூடத் தெரியாமல் 500 ரூபாய் தொகுப்பை அரசின் பெரிய சாதனை என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறார்.

மேலும், அரசின் சார்பில் இலவச அரிசி வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த அரிசியின் தரத்தை ஒரு முறையாவது நேரில் பார்த்தாரா?

இப்படி மக்களுக்கு தரமில்லாத, பயனில்லாத பொருள்களை கொடுத்ததுதான் சாதனையா?

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குத் தலா 1,000 ரூபாய் 2 முறை வழங்கப்பட்டதாக கூறியிருப்பது சம்பந்தமாக எத்தனை பேருக்கு இதுவரை வழங்கப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

புதிய முதலீடுகளைப் பெற்றிட தொழில் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பாம்! இதுவரை இந்த அழைப்பின் பேரில் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன?

123 தேசிய விருதுகள்!? உள்ளாட்சியில் சாதனைகள்!? பிறகு ஏன், கோவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது? குப்பைகள், சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேடு மிக்க நகரமாக கோவை உள்ளது?

2G அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், கடந்த 21 டிசம்பர் 2017 அன்று, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து, உத்தரவிட்டது கூட இந்த அமைச்சருக்கு தெரியாமல் போனது ஏன்?

“வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று அறிக்கை வெளியிடுவது அமைச்சர் பதவிக்கு அழகல்ல!

“ஊழல் முறைகேட்டில் உலக சாதனை படைப்பார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி”- தி.மு.க எம்.எல்.ஏ சாடல்!

மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்து , “கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன்” என்ற ஒரே நோக்கத்துடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டு, ஊழலும் - லஞ்சமும் புரையோடிப் போய், உள்ளாட்சித் துறை அமைப்பில் காணுமிடம் எல்லாம் ஊழலே நிறைந்திருக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “ஊழல்களின் மொத்த இருப்பிடமாக” செயல்பட்டுக் கொண்டு, நாட்டையும், நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் சுரண்டி, மக்கள் நலன் மறந்து, மக்களை வாட்டி வதைத்து வருவது தமிழக மக்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும்.

தனக்கு எதிரான ஊழல் வழக்குகளை மறைக்கும் பொருட்டு , சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை, காவல்துறை போன்ற அமைப்புகளைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேராபத்து ஏற்படுத்தியிருப்பதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

நெருப்பில்லாமல் புகையுமா? ஒரு அமைச்சர் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வருகிறது என்றால் என்ன காரணம்? ஊழல் முறைகேடுகள் நடக்காமல் ஊழல் வழக்குகள் தொடர்ந்து போடப்படுமா? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்வதுபடி “தான் குற்றமற்றவர்” என்றால், தகுந்த ஆதாரங்களுடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாதது ஏன்? லஞ்ச ஊழல் தடுப்புத் துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்காதது ஏன்? இதுகுறித்து பதிவிடுபவர்கள், பேசுபவர்கள் அனைவரையும் காவல்துறையை ஏவி விட்டு பொய் வழக்கு போட்டு கைது செய்வது ஏன்? தன்னுடைய முறைகேடுகள் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்பதாலா?

இப்படிப்பட்ட ஒருவர் ஒரு உத்தமர் போல தன்னைக் காட்டிக் கொண்டு, தான் செய்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருப்பதை பார்த்து “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?” என்ற அச்சத்தில், அறிக்கை என்ற பெயரில் பிதற்றல்களுடன், கழகத் தலைவர் அவர்கள் மீது உண்மைக்கு புறம்பான, ஆதாரமில்லாத தகவல்களைக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் அவமதித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ள பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். தமிழக மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போலி முகத்திரையைக் கிழித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories