கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் நிா்வாகி பிரசாத் மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.
மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா்.
இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் நேற்று நண்பகல் ஆஜரானாா். அவரிடம் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து விடியவிடிய விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது என்றும் இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று தகவல் வெளியானது.
இதனிடையே சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை முதல் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கைதானவர்களுடன் கிருஷ்ணாவில் செல்போன் உரையாடலை ஆய்வு செய்யத் தொடங்கினர்.இதில், கிருஷ்ணாவும் கைதானவர்களும் கோட் வேர்டு மூலம் பேசிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை போலீசார் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.