தமிழ் சினிமாவில் விஜய், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தார் ஷாலினி. பின்னர் நடிகர் அஜித்தைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
அவ்வப்போது, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் நடிகை ஷாலினியின் புகைப்படம் வைரலாகும். அப்போது அஜித் மற்றும் ஷாலினியின் ரசிகர்கள் உற்சாகமாக டிரண்டாக்குவார்கள்.
இந்நிலையில் நடிகை ஷாலினி ட்விட்டரில் இணைந்து விட்டதாக நேற்று தகவல் ஒன்று வேகமாக பரவியது. மேலும், Mrs Shalini Ajithkumar என்ற ட்விட்டர் கணக்கில், நான் ட்விட்டரில் இணைவது மகிழ்ச்சி. என் அன்பான கணவருடன் முதல் ட்வீட்டை பதிவிடுகிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த ட்விட்டரை நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் பின்தொடர துவங்கினர். மேலும் இந்த ட்விட்டர் பக்கம் சில மணி நேரத்திலேயே வைரலானது. இந்நிலையில் நடிகர் ஷாலினிக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்றும் அவரது பெயரில் மர்ம நபர்கள் போலியாக கணக்கு துவங்கியுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்துள்ளார். அதில் Mrs Shalini Ajithkumar என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நடிகை ஷாலினிக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டரில் இதுதொடர்பாகப் பதிவிட்டுள்ளார்.