சினிமா

“அது நான் இல்லை; ராபின்ஹூட்டாக இருக்கலாம்”- கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்தது பற்றி அமீர்கான் ட்வீட்!

டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு கோதுமை மாவில் 15 ஆயிரம் ரொக்கத்தை மறைத்து வைத்து தான் விநியோகித்ததாக வீடியோ பரவியதை அடுத்து நடிகர் அமீர் கான் விளக்கமளித்துள்ளார்.

“அது நான் இல்லை; ராபின்ஹூட்டாக இருக்கலாம்”- கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்தது பற்றி அமீர்கான் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வேலையின்றி உணவு கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். அரசுத் தரப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என அனைவருக்கும் உணவும் இழப்பீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அது வெறும் அறிவிப்போடு மட்டும் இருப்பதால் தன்னார்வலர்கள் பலர் ஏழை எளியோருக்கு தங்களால் ஆன உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சில பகுதிகளில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்காக வழங்க ஒரு கிலோ கோதுமை மாவு கொண்ட பார்சல் நிறைந்த லாரி வந்திறங்கியது. அதனை சிலர் வாங்க மறுத்தனர். ஆனால், ஏழை மக்கள் பலர் அந்த கோதுமை மாவு பார்சலை வாங்கிச் சென்றனர்.

கோதுமை மாவு பொட்டலங்களை வாங்கியவர்கள் வீட்டுக்குச் சென்று அதனைத் திறந்து பார்த்ததும் அதில் 15 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர். இந்த கோதுமையையும், பண உதவியையும் வழங்கியதற்கு பின்னணியில் பாலிவுட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அமீர் கான்தான் உள்ளார் என டிக்டாக்கில் வீடியோ ஒன்றும் உலாவியது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி அமீர்கானுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டவர் அமீர்கான் தரப்பைச் சேர்ந்தவரா அல்லது பயனாளியா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை.

இந்த நிலையில், இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் விளக்கமளித்து பதிவிட்டுள்ளார் நடிகர் அமீர் கான். அதில், “ கோதுமை மாவு பொட்டலத்தில் பணம் வைத்து விநியோகித்தது நான் இல்லை. அது போலியான செய்தியாகவும் இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு ராபின்ஹூட் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம் என நினைத்திருக்கலாம். பாதுகாப்பாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, தான் அதைச் செய்யவில்லை என நேர்மையாக ஒப்புக்கொண்டதற்காக ரசிகர்கள் அமீர் கானுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories