உலகம்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: ஒரே நேரத்தில் வீசப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்- தொடங்கிய மற்றொரு போர்
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த போரில் ஹாமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், ஹாமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானின் ஹஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறி அதற்கு பதிலடி தரப்படும் என்று ஈரான் சார்பில் கூறப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை வானில் வைத்தே அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமனில் இருந்து நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!