உலகம்

லிபியாவை தாக்கிய புயல்.. உடைந்த அணைகள்.. உருத்தெரியாமல் போன நகரங்கள்.. 20 ஆயிரம் பேர் பலியான சோகம் ?

மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்பட்ட டேனியல் புயல் சில நாட்களுக்கு முன்னர் வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியாவை தாக்கியது. இதனால் 24 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 400 மிமீ வரை மழை பெய்துள்ளது. இதன் காரணமாக டேர்னா என்னும் ஆற்றில் கட்டப்பட்டிருந்த இரண்டு அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டியது.

இதனால் அந்த அணைகள் திடீரென உடைந்தன. இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து வெளியேறிய ஏராளமான வெள்ளநீர் அந்த பகுதியில் இருந்த டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் ஆகிய நகரங்களை தாக்கியதில் அந்த நகரங்கள் கடும் சேதமடைந்தன.

இந்த பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச்செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தில் இதுவரை 6 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இதுவரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து வெளியான தகவலில் அணைகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் கடற்கரையோரம் இருந்த நகரத்தில் இருந்த மக்களை வாரிக்கொண்டுபோய் கடலில் வீசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கரையோரப்பகுதி முழுவதும் பிணங்கள் குவிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதோடு, லிபியாவில் தற்போது இரண்டு போட்டி அரசாங்கங்கள் செயல்பட்டு வருவதால் அங்கு மீட்புப்பணி மேற்கொள்ள கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த வெள்ளத்தில் 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என டெர்னா என்ற நகரத்தில் மேயர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்து உளறி வரும் அண்ணாமலை"... அமைச்சர் சேகர்பாபு பதிலடி!