
THE WEEK ஆங்கில வார இதழ் சார்பில் நடைபெற்ற “TAMIL NADU LEADERSHIP SUMMIT” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பேட்டி விவரம் பின்வருமாறு,
கேள்வி – உங்கள் தலைமையில் ஒரு மெகா கூட்டணியை கட்டி அமைத்திருக்கிறீர்கள். உங்களை விமர்சித்தவர்கள், உங்களை எதிர்த்து நின்றவர்கள் அனைவரும் உங்கள் கூட்டணிக்கு உங்கள் தலைமையின் கீழ் வந்திருக்கிறார்கள்.
இப்படி எல்லோரையும் கட்டி அரவணைத்து கொண்டுவருவது என்பது ஒரு பெரிய சவாலாக இருந்திருக்கும். இந்த சவாலை எப்படி தொடர்ந்து சமாளிக்கப்போகிறீர்கள்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் - இது எண்ணிக்கையில் அமையப்பெற்ற கூட்டணி அல்ல. எண்ணத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணி.

தமிழ்நாட்டில் இந்த கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.
இப்போது அமைய இருக்கும் கூட்டணியிலும் பல கட்சிகள் இணைந்திருக்கிறது. இன்னும் இணைய இருக்கிறது. அதனால், இதை நான் சவாலாக கருதவில்லை. இதை கொள்கைக் கூட்டணியாக நாங்கள் கொண்டு செல்கிறோம்.
கேள்வி – நேற்று பிரதமர் மோடி மதுரையில் பேசும்போது திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது ஒரு கானல் நீராக இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் - மோடியைப் பொறுத்தவரை சொல்லவேண்டுமென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.
அதுதான் கானல் நீராக சென்றுகொண்டே இருக்கிறதே தவிர, அவர் சொல்வது போன்று இல்லை.






