உலகம்

விதிமீறலில் ஈடுபட்ட ட்விட்டர் நிறுவனம்.. சிக்கலில் எலான் மஸ்க்.. புதிய பெயரால் வந்த சோதனை !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தற்போது ட்விட்டரை விட்டு பலர் வெளியேறி வருவதாக கூறப்பட்டது. மேலும், ட்விட்டரின் நீண்ட நாள் போட்டியாளரான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி வரவேற்பை பெற்றதும் கவனிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க்ட்விட்டரின் அடையாளமாக பல ஆண்டுகளாக நீலக்குருவி இருந்த நிலையில், தற்போது அதனை X என்ற ஆங்கில எழுத்துக்கு எலான் மஸ்க் மாற்றியுள்ளார். மேலும், சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த குருவி நீக்கப்பட்டு அங்கு X என்ற பெயர் பலகை பொருத்தும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில், அனுமதி பெறாமல் புதிய பெயர் பலகை பொருத்தும் பணி மேற்கொள்வதாக கூறி, போலிஸார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து கூறிய அதிகாரிகள், அமெரிக்க சட்டங்களின் படி ஏற்கனவே உள்ள பெயர் பலகையை அகற்றுவது அல்லது புதிய பெயர் பலகையை வைக்க வேண்டுமானால், அதற்கு வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் விபத்து எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

ஆனால், இத்தகைய அனுமதிகள் எதையும் பெறாமல் இந்த பணி நடத்தப்பட்டதால் அதனை நாங்கள் பாதியில் தடுத்தி நிறுத்தியுள்ளோம். உரிய அனுமதி பெற்றபின் இந்த பணி தொடர்ந்து நடைபெற நடைபெற அனுமதி வழங்குவோம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள எலான் மஸ்க்குக்கு இது மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Also Read: ரஷ்ய தலைநகரை இரவு நேரத்தில் தாக்கிய உக்ரைன் ட்ரோன்கள்... பதிலடி தரப்படும் என ரஷ்யா அறிவிப்பு !