ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றது.
இந்த நிலையில், தற்போது உக்ரைனின் ட்ரோன்கள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், இதனால் மாஸ்கோவில் உள்ள ஏர்போர்ட் மூடப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும், இதனால் மாஸ்கோவில் தரையிறங்க வந்த விமானங்கள் அருகில் இறுக்கும் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டது என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் உக்ரைன் நாட்டிற்குத் தொடர்ந்து உதவி வருவதாகவும், அவர்களின் உதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல்களை உக்ரைன் நாட்டினால் நடத்த முடியாது என்றும் இதற்கு விரைவில் பதிலடி தரப்படும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.